Friday, February 22, 2013

கொடி முல்லைக்கு தேர்தந்த வள்ளல் மலை

கொடி முல்லைக்கு தேர்தந்த வள்ளல் மலை



பாரி ஆண்ட பறம்பு மலை பற்றிய சித்திரங் களையும் தொகுத்துக் கொள்ளலாம். சங்ககாலத்தில் பறம்பு எனப்பட்ட இம்மலையைத் தேவார காலத்தில் திருஞான சம்பந்தர் பாட்டில் திருக் கொழுங்குன்றம் என்றழைத்துள்ளார் அவர். வளைந்த உச்சியை உடையது கொடும் குன்றம். கொடு என்பது வளைவு. சங்ககாலத்தில் (கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற் றாண்டுக் காலப்பகுதி) பறம்பு மலையைப் பாரி நாடு, பறம்பு நாடு, பற நாடு, பறம்பு மலைச் சுனை, பனிச்சுனை என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. ஔவை, மிளைக்கந்தனார், நக்கிரர்,நன்னாகன்,பெருஞ்சித்திரன், நல்லூர் நத்தத்தனார் முதலிய புலவர்கள் பாரியையும் அவன் நாட்டையும் பாடியுள்ளார்கள்.
பாரிவேட்டை என்று தமிழக அளவில் நடத்தப்படும் சடங்கு, இந்து மதத் தோடு இணைக்கப்பட்டு சென்ற நூற் றாண்டுவரை நடந்துள்ளது. புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை டயரிக் குறிப்பு களில் புதுச்சேரியில் பாரிவேட்டை நடந்துள்ள குறிப்பு இடம் பெற்றுள்ளது. பறம்புப்பகுதியில் அது இன்றும் நடக்கிறது. மலைக்காடுகளில் நிலை பெற்ற வேட்டைச் சமூகம் வேறுவேறு வாழ்க்கைப் பயணங்களில் பயணப் பட்டாலும் தம் பூர்வ வாழ்க்கையை நினைவு மனத்தின் ஊடாகச் சுமந்து சென்ற புனைவின் வெளிப்பாடு பாரி வேட்டை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

பறம்புமலை-திருக்கொழுங்குன்றம் வரலாறு எனும் தலைப்பில் குன்றக்குடி ஆதின வித்வான் பெரும் புலவர் மரு.பரமகுரு எழுதிய (கபிலன் பதிப்பகம், 321.  முதல் தளம், மகாவீர்  நகர், குருவடிக்குப்பம்புதுச்சேரி) மிகுந்த சுயமான ஆராய்ச்சி கொண்ட அருமையான புத்தகத்தில், பாரியின் பறம்பு நாட்டு எல்லைகள் முதல்முறையாகக் கண்டடையப்பட்டுள்ளது. நாடுகளின் எல்லைப் பிரச்னை மேலெழும் இன்று இது தேவையான ஆய்வாகும்.

பறம்புநாட்டுத் தென்எல்லை திரு மோகூர், பரமக்குடி எனப்படும் பறம்புக்குடி, கிழக்கெல்லை காளை யார் கோயில், அனுமந்தக்குடி, வடக் கெல்லை, கானாடுகாத்தான், குடுமி யான்மலைப்புறம், மேற்கெல்லை மருங்காபுரி துவரங்குறிச்சி, அழகர் மலைக் கிழக்குப் பகுதி. இந்தப் பகுதிக்குள் இருந்த ஊர்கள் 300 என்று அக்காலத்தில் கணக்கிடப்பட்டிருக் கிறது. இந்த பூகோள அமைப்புப்படி பாரியின் பறம்பு நாடு, சேர சோழ பாண்டிய எல்லைப் பிரதேசங்களுக் குள் உள்ளங்கை போல இருந்துள் ளது. மூவேந்தரின் போர் இந்த எல்லை குறித்தும் ஏற்பட்டிருக்க மிகுந்த வாய்ப்புண்டு.

இன்றும் ஒரு மக்கள் வரலாற்றுத் தகவல். முல்லைத்குத் தேரீந்த பாரி யின் கொடைமனம், மக்களின் மன சாட்சியாகிக் கொம்பின்றிக் தளும்பும் கொடிகளைக் காணும் போதெல்லாம் மனம் தளும்பி, 

கொடி தளும்பினால் குடி தளும்பும்

எனும் ஒரு சொல வடையே இப்பகுதியில் நிலவுகிறது என்கிறார்கள் பேராசிரியர்கள் சேது பதியும், அருணனும். இன்றும் இப் பகுதிக்குழந்தைகளுக்குப் பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்ல மங்கை, அங்கவை, சங்கவை என்று பெயர் வைக்கப்படுவதையும் குறிப் பிட்டுள்ளார்கள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.