Monday, February 11, 2013

பசும்பொன் தேவர்

எம் முக்குலத்து இராஜமாணிக்கம் எங்கள் பசும்பொன் தேவர் அய்யா



தெய்வத்திருமகன் பசும்பொன் தேவர் அவர்களின் வீரஉரையைக் கேட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் லத்தி கம்பை கீழேபோட்டுவிட்டு வந்தேமாதரம் ..என்று முழங்கினார்கள். வடக்கே ஒரு பாலகங்காதர திலகர் தெற்கே ஒரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர்கள் இருவருக்கும் பிரிட்டிசு அரசாங்கம் வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டது. அதுபோலதான், பிரிட்டிசு அரசாங்கம், தமிழகத்தில் வீரஇனமக்களாகிய முக்குலத்தோரை ஒடுக்குவதற்காக குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவந்தது. அன்பர் ஒருவர் பின்னோட்டத்தில்-- முக்குலத்தோர்கள் கொலை, கொள்ளைஅடித்ததால்,அதைத்தடுக்க,பிரிட்டிசு அரசு கைரேகைச்சட்டம் கொண்டுவந்தது என்று எழுதியுள்ளார். அவர் எழுதியது மிகவும் தவறானது.இச்சட்டப்படி இவர்களின்மீது சாட்டப்பட்ட குற்றம் இவர்களின் முன்னோர்கள் அதாவது 1.தந்தை 2.பாட்டன் 3.பூட்டன் 4.முப்பாட்டன் 5.எள்ளுப்பாட்டன் 6.கொள்ளுப்பாட்டன் இப்படி நம்முன்னோர்கள் அரசை எதிர்த்து போராடியவர்கள். அப்போராட்டத்தின்போது இவ்வீரஇனத்தினர் பிரிட்டிசு அரசின் அதிகாரிகளைத்தாக்கினர் அல்லது கொன்றனர்..அல்லது அரசை நடத்தவிடாமல் புரட்சிசெய்தனர்…அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் அல்லது ராஜதுவேஷ குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள் போன்றவைகள்தான் இவர்கள்மீது சாட்டப்பட்டக்குற்றச்சாட்டுகள் ஆகும், இவர்கள் அடங்கமறுத்தனர். பிரிட்டிசு அரசை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் இக்குலமக்கள்மீது சாட்டப்பட்டக் குற்றச்சாட்டுகளின் சுருக்கம்.. பிரிட்டிசு அரசு முக்குலத்து மக்களைக்கொன்றுகுவித்ததை நல்ல வெள்ளையர்களே விரும்பவில்லை என்பதை நான் இங்கு குறிப்பிடவிரும்புகிறேன். அதைப்பற்றிய செய்தி வருமாறு….
25-06-1772ம் நாள் காளையார்கோயில் வரலாற்றில் ஒரு கருப்புநாள். . . .மன்னர் முத்துவடுகநாத தேவர். . . நிராயுதபாணியாக கோயிலில் இறைவனை வழிபட்டுக்கொண்டிருந்தார். மார்பில் சந்தனம், கையில் இறைவனின் விபூதி குங்குமம் தவிர வேறு எதுவுமில்லை. அந்த அமைதியான நேரத்தில், நயவஞ்சக வெள்ளையன் பான்சோர் அவரையும் அவருடைய இளைய இராணி கௌரிநாச்சியாரையும் சுட்டுவீழ்த்திய நாள். அந்த நயவஞ்சகக்கூட்டம் தீட்டிய சதித்திட்டத்தின்படி கும்பினிப்படை இரண்டாகப்பிரிக்கப்பட்டது. ஒரு பகுதியினர் மருது சகோதரர்களின் படைகளுடனே மோதிக்கொண்டே இருப்பது. அதேநேரத்தில் மற்றொருபகுதி இரகசியமாக குப்பினிப்படையின் தளபதி பான்சோரின் தலைமையில் மன்னர் இருக்கின்ற காளையார்கோயிலுக்குச்சென்று, மன்னர் அயர்ந்து அமைதியாக இருக்கிறநேரம்பார்த்து அவரைக்கொல்வது. விதிவலியது.கொடியது என்பதுபோல், மன்னர் முத்துவடுகநாத தேவரும் அவர் இளைய இராணி கௌரிநாச்சியார் மட்டும் காளையார்கோயில் கோட்டையில் தங்கிஇருந்தனர். மற்றொருபக்கத்தில், மருதுசகோதரர்களும் வீரமங்கை வேலுநாச்சியாரும் போர்க்களத்தில் போராடிக்கொண்டிருந்தனர். மருதுவின்படை புயல்வேகத்தில் பாய்ந்து பறந்து கும்பினிபடையை நாசம் செய்துகொண்டிருந்த்து.. மறவர் படையிலுள்ள ஈட்டி சமுதாடு, வல்லயம், எறிஈட்டி, சுண்டுவில் முதலியன காற்றைவிட கடும்வேகத்தில் பறந்துசென்று கும்பினிப்படையை குத்திக்கொன்று குலை நடுங்கச்செய்தன- அதேசமயம், கும்பினியாரின் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் சரமாரியாக குண்டுகளை மறவர்கூட்டத்தின்மீது பொழிந்து பெரும் உயிர்சேதத்தை உண்டுபண்ணின. இதைஅறிந்த மன்னர் முத்துவடுகநாத தேவர், மறவர்களின் உயிர்சேதத்தை தவிர்க்க விரும்பி, பேச்சுவார்த்தைக்கு முற்பட்டார். கும்பினியாரும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டனர். பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டிருந்தது. . . பேச்சுவார்த்தை நல்லமுடிவைஎட்டவேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்வதற்காக, மன்னர் முத்துவடுகநாத தேவரும்,இளைய இராணி கௌரி நாச்சியாரும் காளையார்கோயில் காளேசன் ஆலயத்திற்குள் சென்று இறைவனை வழிபட்டுக்கொண்டிருந்தனர். அவர் சரிகை வேட்டியுடனும் சந்தனம் பூசிய மார்புடனும் பக்திப்பரவசத்துடன் இறைவன்முன் அனைத்தையும் மறந்து சிவநாமத்தை சிந்தையில் நினைத்தபடி மனம் உருகி நின்றுகொண்டிருந்தார். கணவனை பின்பற்றி, இளையஇராணியும் நிழல்போல் நின்றுகொண்டிருந்தார். வாளையும், வேலையும், வில்லையும், வளரியையும் ஏந்தி வெற்றிக்கனிகளைப்பறித்த அந்த வெற்றி வீர்ர், கும்பினிப்படையின் சதித்திட்டத்தை அறியாதிருந்தார். போர்க்கவசம் அணியவேண்டிய மார்பில் மணக்கும் சந்தனம் மட்டுமே திகழ்ந்தது. வாளையும்,வேலையும், வளரியையும் ஏந்தவேண்டிய வீரக்கைகள், விபூதியையும் குங்குமத்தையும் பயபக்தியுடன் ஏந்தியிருந்தன. அப்போது ஒற்றன் ஓடிவந்து அவர்காதுகளில் கும்பினிப்படை கோயிலைச்சுற்றி வளைத்து நிற்பதை மெல்ல இரகசியமாக கூறினான். உடனே, அந்த ஆண்சிங்கம் கர்ஜித்துக்கொண்டே வீரத்தை மட்டுமே நெஞ்சில் ஏந்தியபடி வெற்றுடம்புடன் வெள்ளையர்படையைநோக்கி ஓடிவந்தது. கயவன் வெள்ளைத்தளபதி பான்சோர் அந்த வீர சிங்கத்தை மார்பில் சுட்டுவீழ்த்தினான். தன் கணவரைக்காக்க ஓடிவந்த இளயராணி கௌரிநாச்சியாரையும் கும்பினிப்படை சுட்டுவீழ்த்தியது. இக்கொலைப்பற்றி INDIAN RECORD SERVICES VESTIGES OF OLD MADRAS (1640-1800) & HENRY DAVIDSON LOVE(VOL. III) என்ற நூல் இலண்டனில் இந்திய அரசால் அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 71ஆம் பக்கத்தில் உள்ள செய்திச்சுருக்கம் வருமாறு…..சர் இராபர்ட் பிளச்சர் என்ற பிரபு கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதா ரர் கூடியிருந்த பகுதியில், இந்திய நிகழ்வுகள் குறித்து செய்திகளைத் தொகுத்துக்கூறிக்கொண்டிருந்தார்…….
.அப்போது கிழக்கிந்தியக்கம்பெனியின் உரிமையாளர்கள் அனைவரும் கூடியிருந்தனர். அச்சமயம் அவர் ஜெனரல் ஸ்மித் தளபதியின் வழிகாட்டுதலின்படி, கர்னல் பான்சோர் என்பவர் தமிழ்மறவர்களை எப்படி கசாப்புக் கடைக்காரனைப்போல படுகொலைசெய்து வீழ்த்தினான் என்று கூறிக்கொண்டிருக்கும்போது, அந்தக்கொடுமையைக் கேட்க சகிக்காத நல்ல வெள்ளைக்கார முதலாளிகள் அச்சபையிலிருந்து வெளிநடப்புசெய்து தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர். மீதியிருந்தவர்கள் முகத்திலும் வெறுப்பும் வியப்பும் கலந்து தோன்றின. அப்படி அவர்களை வியப்பிலும் வெறுப்பிலும் ஆழ்த்திய செய்தியாவது………………….ஜெனரல் ஸ்மித் ஒரு நவாப் அரசரோடு உடன்படிக்கை செய்துகொண்டான். இருவரும் அங்குள்ள மன்னர் ஒருவரை எதிர்த்துப்போராட முடிவு செய்தனர். இதையறிந்த அந்த அரசர் பொருட்சேதம், ஆட்சேதத்தைக் குறைக்க எண்ணி இவர்களுடன் ஓர் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஒரு தூதுவரை அனுப்பினார். சமாதானத்தூதை ஏற்றுக்கொண்ட ஜெனரல் ஸ்மித் தனது படையெடுப்பைக்கைவிட்டுவிட்டதாக தூதுவன் மூலம் அம்மன்னருக்குத் தெரியப்படுத்தினான். அத்தூதுவனின் வார்த்தைகளை நம்பிய மன்னரும் சமாதானம் ஏற்பட்டதாகக்கருதி, தன்படைகளைப் பின்வாங்க உத்திரவிட்டதுடன், தன்னுடைய மெய்க்காவல்களையும் முழுவதுமாக விலக்கிக்கொண்டார். மன்னரும் மக்களும் போரைஎதிர்பார்க்காதநேரத்தில், எந்த முன்னறிவிப்பும் இன்றி, காளையார்கோயிலை நோக்கி கர்னல் பான்சோர் படைநடத்தினான். மன்னரும், மறவர்களும் எந்தவித பாதுகாப்புமுயற்சிகளையும் செய்யாதிருந்தநேரம்பார்த்து, மறவர்களையும், மன்னரையும் காக்கைக் குருவிகளை சுட்டுவீழ்த்தியதுபோல் சுட்டுவீழ்த்தினான். இந்த படுகொலையைத் தான் செய்ததாக கர்ன்ல் பான்சோரே ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளான்….. இவ்வாறு சர் இராபர்ட் பிளச்சர் செய்திகளை தொகுத்துக்கூறினார்.
நல்லவேளையாக சிவகங்கைச்சீமையை காப்பாற்றவேண்டும் என்று எண்ணிய இறைவன், மந்திரி தாண்டவராய பிள்ளையையும் மருது சகோதர ர்களையும், வீரமங்கை வேலுநாச்சியாரையும் காளையார்கோயிலுக்கு வெளியே வெகுதூரத்திற்கப்பால்பிரித்து வைத்துவிட்டான். .இதுதான் விதிபோலும்.(நன்றி..முனைவர் ம.நடராசன்,விடுதலைப் போரில்வேலுநாச்சியார் பக்கம் 29—34) இதுதான் வெள்ளையர்களின் குள்ளநரி குணம்….சூழ்ச்சித்திறம்….இப்படித்தான், முக்குலத்தோரை ஒடுக்க கைரேகைச்சட்டம் கொண்டுவந்தனர்… இச்சட்டத்தின்படி, பொழுது சாய்ந்தவுடன் முக்குலத்தைச்சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையங்களுக்கு சென்று கைரேகை பதித்து நாள்தோறும் தங்கள் வருகையை பதிவுசெய்யவேண்டும். இரவுமுழுவதும் காவல் நிலையத்திலேயே படுத்துக்கொள்ளவேண்டும். ஆடுமாடுகளை இரவுநேரங்களில் கொட்டைகைகளில் அடைத்துவைப்பதைப்போல், நம்குலத்தோரை அடைத்துவைத்தனர். காலையில், ஏட்டு விசில் அடித்தவுடன் வீட்டுக்குக்கிளம்பிவிடவேண்டும். மீண்டும் மாலையில் வந்துவிடவேண்டும். அக்காலத்தில், காவல் நிலையம் சுமார் 10 மைல்களுக்கு அப்பால்தான் இருந்தன. போக்குவரத்துக்கு, இன்றிருப்பதுபோல், அடிக்கடி பேருந்துவசதிகிடையாது. நல்ல சாலை வசதிகள் கிடையாது. காட்டாறுகளை மழை வெள்ளக்காலங்களில் நீந்தி கரைசேரவேண்டும். தன்வீட்டில், மனைவி மக்கள் இறந்துவிட்டால்கூட வீட்டில் இருக்கமுடியாது…….மீறினால் சிறைத்தண்டனை. தாய் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தாலும், அந்தத்தாய்க்கு அவன் ஒரேபிள்ளை என்றாலும் இரவுமுழுவதும் அவன் காவல்நிலையத்தில்தான் தங்கவேண்டும். இரவில் அந்தத்தாய் அநாதையாகத்தான் சாகவேண்டும். திருமணம் முடிந்த அன்றிரவே, புதுமாப்பிள்ளை என்றாலும், முதலிரவு கிடையாது. திருமணம் முடிந்தஅன்றும் காவல் நிலையத்திற்கு வந்துதான் இரவைகழிக்கவேண்டும்…...அப்பப்பா நம் முன்னோர்கள் அடைந்த துன்பங்கள் அளவிடமுடியாதவை…சொல்லி மாளாதவை. . . இவ்வளவுக்கும், நிகழ்காலத்தில் வாழ்ந்தவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. பாட்டனோ,பூட்டனோ குற்றவாளியாக இருந்து அவர்களது மகனோ, பேரனோ யோக்கியனாக ஒரு குற்றமும் செய்யாதவனாக மிகவும் நல்லவனாக விவசாயம் செய்துபிழைப்பவனாக இருந்தாலும், அவன் பரம்பரையே குற்றவாளி என்று கூறி அவனும் குற்றவாளியே எனக்கருதப்பட்டு, காவல்நிலையத்திற்கு வந்து நாள்தோறும் கைரேகை பதித்து அவன் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும். தவறினால், அவனுக்கும் சிறைத் தண்டனை. அவன் முன்னோர்கள் பிரிட்டிசு அரசைஎதிர்த்து போராடிய ஒரே குற்றத்திற்காக இப்படி ஒரு தண்டனை.. இவர்களை இப்படி அடக்கிவைத்தால்தான், தாங்கள் பயமின்றி அரசாட்சி நடத்தமுடிவும் என்று பிரிட்டிசு அரசு கருதியது.அதனால்தான் கைரேகைச்சட்டத்தைக்கொண்டுவந்தது. இப்படி ஓர் இனமே பழிவாங்கப்படுவதைப் பார்த்து சகிக்காத அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் வெகுண்டு எழுந்தார். சிவகாசி காவல் நிலையம் சென்று யாரும் கைரேகை பதிக்க்க் கூடாது என்று பெரும் ஊர்வலம், போராட்டம் நடத்தினார். அப்பொழுது, காவல் நிலையத்தில் நடந்த சூடான கடுமையான வாக்குவாதத்தின்போது, வெள்ளைக்கார காவல்துறை அதிகாரியைப்பார்த்து தேவர் அவர்கள், “கட்டை விரலை அனைவரும் வெட்டிக்கொண்டால், நீங்கள் எதில் ரேகை வாங்குவீர்கள்?” என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்டு வாய்மூடும்முன், கண்இமைக்கும்நேரத்திற்குள், அங்கிருந்த இளைஞர்கள் தங்கள் இடது கை கட்டைவிரைலை வெட்டிக்கொண்டார்கள். இதனால், காவல்துறையே பயத்தில் கதிகலங்கிப்போனது…(நன்றி:INA.FREEDOM FIGHTERS ASSOCIATION.T.N.SECRETARY THIRU K.CHANDRASEKARAN) .அய்யா, சிலம்பு அவர்களே, கொலை கொள்ளைஅடிக்கும் குற்றவாளிகள் ஏன் தங்கள் கட்டைவிரல்களை வெட்டிக்கொள்ளவேண்டும்? கொலை, கொள்ளை குற்றங்களைத்தடுக்க வெவ்வேறு தனித்தனிச்சட்டங்கள் அல்லவா உள்ளன? அச்சட்டங்கள் இன்றும் அல்லவா நடைமுறையில் உள்ளன,கொலை கொள்ளையில் ஈடுபட்டோர் எல்லா சாதியிலும் அல்லவா உள்ளனர்? முக்குலத்தோருக்கென்று ஏன் கைரேகைச்சட்டம் கொண்டுவரவேண்டும்?. கொலை, கொள்ளையர்களுக்காக, தெய்வத்திருமகனார் முத்துராமலிங்க தேவர் அவர்கள் போராடவில்லை. உங்களைப்போன்றோர் முதலில் இதனைப்புரிந்துகொள்ளவேண்டும்.”எல்லா விளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” (குறள் 299)
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு.ஏ.ஆர்.பெருமாள் அவர்கள முடிசூடாமன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா என்ற நூலில் பக்கம் 46—53ல் எழுதியுள்ளதுவருமாறு:- வெள்ளையனை எதிர்த்து வீரப்போர் புரிந்த நெல்லைமாவட்டத்து நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவன்(புலியைஅடக்கி கொன்றதால் புலித்தேவன் என்ற காரணப்பெயர் ஏற்பட்டது) பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதி பகதூர் வெள்ளையத்தேவன், சிவகங்கைச்சீமையை ஆண்ட மருது சகோதரர்கள், மன்னர் முத்துவடுகநாத தேவர், வீரமங்கை வேலுநாச்சியார். . . இப்படி வெள்ளையர்களை எதிர்த்துபோராடிய பரம்பரையில் வந்த தேவர் திருமகனும், தேவர்குலமக்களை அடக்குவதற்கு வெள்ளையன் கொண்டுவந்த கைரேகைச்சட்டத்தை எதிர்த்துப்போர்கொடியைத் தூக்கினார். தேவர் திருமகனார் ஊர் ஊராகச்சென்று மேடையில் “கட்டைவிரலை வெட்டிக்கொள். அல்லது சிறைக்குப்போ. ரேகை வைக்காதே”
என்று முழக்கமிட்டார். ரேகைச் சட்டத்தை எதிர்த்துத்தேவர் மக்களைத் திரட்டிவருவதை கண்ட பிரிட்டிசு அரசு, தேவரை சிவகாசி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்தது. டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் போன்ற காவல்துறை அதிகாரிகள் தேவரை மிரட்டிப்பார்த்தனர். தேவரை டி.எஸ்.பி. விசாரித்துக்கொண்டிருக்கையில் இந்தச்செய்தி வெளியில் வேகமாகப் பரவியது- ஆயிரக்கணக்கான மக்கள் காவல்நிலையத்தை முற்றுகை இட்டனர். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பது போல கடுமையான பதற்றம் நிலவியது. அப்போதுதான், தேவர் அவர்கள் டி.எஸ்.பி.யைப்பார்த்து ”கட்டைவிரலை வெட்டிக்கொண்டால்,நீங்கள் எதில் ரேகை வாங்குவீர்கள்” என்று கேட்டவுடன் இளைஞர்கள் தங்கள் கட்டைவிரல்களை அங்கேயே காவல்நிலைய அதிகாரிகள் முன்னிலையில் ஆக்ரோசமாக வெட்டிக்கொண்டனர். நிலமையை உணர்ந்த டி.எஸ்.பி. தேவரைக்கைதுசெய்யாமல் விசாரணை செய்துவிட்டு அனுப்பிவிட்டார். தேவர் திருமகனார் வெளியில் வந்ததும், “ரேகைச்சட்டம் ஒழிக!” “தேவர் மகன் வாழ்க” “வந்தே மாதரம்” என்ற வின்னைமுட்டும் பொதுமக்களின் கோஷம் எங்கும் எதிரொலித்தது. அதன்பிறகு தேவர் திருமகன் பசும்பொன் வந்து ரேகைச்சட்டத்தை பூண்டோடு ஒழிக்க என்னசெய்யவேண்டும் என்று ஆலோசனை நடத்தினார். அதன்விளைவாக பசும்பொன்னுக்கு அருகில் அபிராமம் என்னும் ஊரில் ஆப்ப நாட்டு மறவர்கள் மாநாடு நடத்துவதென முடிவு செய்தார். அதன்படி 1934 மே12, 13 தேதிகளில் ஆப்பநாட்டு மறவர்கள் மாநாடு பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு தலைமையில் நடைபெற்றது. பின்னர் 1.வரதராஜுலு நாயுடு 2.தேவர் 3.ச்சிவர்ணத்தேவர் 4.பிள்ளையார்குளம் பெருமாள் தேவர் 5.நவநீதகிருஷ்ண தேவர் ஆகிய ஐவர் கொண்ட குழு கவர்னரைப் பேட்டி கண்டு ரேகைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.. அதன்படி ஐவர்குழு சென்னைக்குச்சென்று அப்போதைய மாகாண கவர்னராக இருந்த முகம்மது உஸ்மானை சந்தித்து தீர்மான மனுவை அளித்தது. ஆப்பநாட்டு மறவர்கள்மீதுபோடப்பட்ட கைரேகைச்சட்டத்தை ரத்து செய்யும்படி அக்குழு கவனரைக்கேட்டது. இந்தச்சட்டத்தை ரத்துசெய்ய பசும்பொன் தேவரவர்கள் முன்வைத்த சில வாதங்கள்: 1.குற்றப்பரம்பரை என்று குற்றம் சாட்டப்பட்ட இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான், பல பகுதிகளில் மன்னராக இருக்கின்றார்கள். 2.இராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, புதுக்கோட்டை ராஜா என்று உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். 3. தமிழ்நாட்டிலுள்ள 90% ஜமீன்தாரர்கள் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள். 4.எல்லா காவல் நிலையங்களிலும் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள் மற்றும் ஏ.எஸ்.பி.(ஸ்பெஷல் ஆர்ம்ட் போலீஸ்) என்று சொல்லப்படும் சிறப்பு காவல் படையும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெருமளவில் பணிபுரிகின்றனர். 5.இந்திய ராணுவத்தில் சிப்பாய்களாக இந்த சமூகத்தினர் பலர் இருக்கின்றார்கள். இவ்வாதங்களைமுன்வைத்து கொடுக்கப்பட்ட மனுவைப் பெற்றுக்கொண்ட கவர்னர் கூறியதாவது:- “இந்தச்சட்டம் என்னால் போடப்பட்டது அல்ல. டில்லி மத்தியஅரசால் போடப்பட்டது. என்னால் ரத்துசெய்ய இயலாது. வேண்டுமானால் உங்களுக்கு உதவுகி2றவகையில், டில்லிக்கு நான் எழுதுகிறேன்” என்று உறுதிஅளித்தார். பின் ஆப்பநாட்டு மறவர்கள் மீது போடப்பட்ட கைரேகைச்சட்டம் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டது. தனது பகுதியில் கைரேகைச்சட்டம் ஒழிந்தாலும், பிரமலைக்கள்ளர் நாட்டில் இச்சட்டம் நடைமுறையில் இருந் ததால்,தேவர் மிகவும் மனம் வெதும்பினார்.
பெருங்காமநல்லூரில் கைரேகைச்சட்டத்தை எதிர்த்த முக்குலத்தோர்மீது துப்பாக்கிச்சூடு: பெருங்காமநல்லூரில் பிரமலைக்கள்ளர்கள் ஒன்று திரண்டு கைரேகை வைக்கமுடியாது என்றுமறுத்து அறவழிப்போரோட்டம் நடத்தினர். அதன்காரணமாக 03—04—1920ஆம் நாள் துப்பாக்கிச்சூடு நடந்து 17 பேர் கொல்லப்பட்டனர்.அந்த துப்பாக்கிச்சூடு பிரமலைக்கள்ளர் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பசுமலை பள்ளியில் மாணவராக இருந்த தேவர் சகமாணவர்கள் வாயிலாக இச்செய்தியை அறிந்தார். ரேகைச்சட்டத்தை எதிர்த்தும், பெருங்காமநல்லுர் துப்பாக்கிச்சூட்டைக்கண்டித்தும், பிரமலை நாட்டில் பல்வேறு முக்கிய ஊர்களில் தேவர் வீர ஆவேசமாக பேசினார். அதன்விளைவாக பிரமலைநாடு இச்சட்டத்தை எதிர்த்து ஒரு பெரும் புரட்சிக்குத் தயாரானது. ரேகைச்சட்ட எதிர்ப்பை அகில இந்திய பிரச்சினையாக மாற்ற தேவர் முயற்சி எடுத்து, திரிபுரியில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடிய நேரத்தில் எம்.எல்.ஆனே தலைமையில் அகில இந்திய சி.டி.ஆக்ட் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. வடநாட்டு, தென்னாட்டுத் தலைவர்கள் பலர், சுயமரியாதைக்குப் பங்கம் விளைவித்துப் பலகொடுமைகள் புரியக்காரணமான சி.டி.ஆக்ட் ஒழிக்கப்படவேண்டும் என ஆவேசமாகப் பேசினர். இறுதியில் சி.டி.ஆக்ட் அகில இந்திய அளவில் ரத்து செய்யப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தச சமயம் இராஜாஜி மதுரைக்கு வந்தார். அவரிடம் ரேகைச்சட்டத்தை ரத்து செய்யும்படி மனுக்கொடுக்க கம்பம் முதல் மதுரை முடிய உள்ள பல ஊர்களிலிருந்து ஊர்வலமாகப்புறப்பட்டு பிரமலைக்கள்ளர் சமுதாயம் மதுரையில் ஜன சமுத்திரம் என திரண்டது. அந்த ஊர்வலத்தில் 2 மைல் நீளம் கொண்டஒரு இலட்சம் பேர் அணிவகுத்தனர். இது சரித்திரப்பிரசித்திப்பெற்ற ஊர்வலம் ஆகும். கள்ளர் சமூக மக்களும் மற்றும் ரேகைச் சட்ட எதிர்ப்பாளர்களும் திரண்ட அந்தஊர்வலம் ஒரு போர்ப்படையாக்க் காட்சி அளித்தது. அந்த மாபெரும் ஊர்வலம் இராஜாஜியைப்பேட்டி கண்டு மனுக்கொடுத்தது. அந்த மனுவில் ரேகைச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் இல்லாவிடில், தேவர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்த்து. மனுவைப்பெற்றுக்கொண்ட இராஜாஜி பதில் எதுவும் சொல்லவில்லை.
தேவரின் வியக்கத்தக்க செல்வாக்கு: இந்த நேரத்தில் தேவருடைய செல்வாக்கை அளக்கத்தக்க ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றைய கவர்னர் பிரமலை நாட்டில் சுற்றுப்பயணம் செயதார். கவர்னர் சிந்துபட்டிக்கு வருகிறபோது அந்தப்பகுதியில் வழக்கமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு செய்து, அதில் கள்ளர் சமூகத்தினர் மாடுபிடிப்பதை கவர்னர் பார்க்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர். சீறிப்பாய்கின்ற முரட்டுக்காளைகளை முரட்டுத்தனமாகப் பாய்ந்து காளைகளை அடக்கும் கள்ளர் சமூகத்தினரை கவர்னர் பார்த்தால், இப்படி முரட்டுத்தனமாக உள்ள ஒரு சமூகத்தினரை அடக்க சி..டி.ஆக்ட் போன்ற கடுமையான சட்டம் தேவைதான் என்று கவர்னர் முடிவெடுத்துவிடுவார். அதன்மூலம் சி.டி.ஆக்ட்டை ரத்து செய்யாமல் தடுத்துவிடலாம் என்று சூதுமதிகொண்டவர்கள் இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சதியைப்புரிந்துகொண்ட தேவர் திருமகன், உள்ளங்கை அளவுள்ள(1 x 16 சைஸ்) ஒரு துண்டுப் பிரசுரத்தில்,”சிந்துபட்டிக்கு கவர்னர் வரும்போது நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு யாரும் மாடுகொண்டு போகவோ , மாடுபிடிக்கப்போகவோ கூடாது. அப்படியாரேனும்போனால், அவன்தான் இனதுரோகி” என்று குறிப்பிட்டார். அவ்வளவுதான். கவர்னர் வருகிற அன்று செக்கானூரனியிலிருந்து உசிலம்பட்டி வரை யாருமே சாலையில் நடமாடவில்லை. கவர்னர் சிந்துபட்டி ஊருக்குள் நுழைந்ததும் ஊரே மயான அமைதியாக காட்சி தந்தது. கவர்னர் திகைத்துப்போய், “என்னமோ விழா என்றீர்கள். ஊரில் ஒரு காக்கை குருவியைக்கூட காணவில்லை. ஊரில் ஆள் அரவம் அற்று காட்சி அளிக்கிறதே ஏன்?” என்று கேட்டார். அப்போது மதுரை கலெக்டர் தேவர் வெளியிட்ட கையகல நோட்டீஸைக்காட்டி “தேவர் ஜல்லிக்கட்டைப் பகிஷ்கரிக்கும்படி விடுத்த அறிக்கையால்தான் மக்கள் யாரும் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல. தங்கள் வருகையையும் பகிஷ்கரித்துவிட்டனர்” என்று கூறினார். அப்போது கவர்னர் மூக்கிலே விரலைவைத்து, “ஒரு கையகல நோட்டீஸில் ஒரு நாட்டையே கட்டுப்படுத்தக்கூடிய அவ்வளவு செல்வாக்கு படைத்த தலைவரா தேவர்?” என்று ஆச்சரியப்பட்டார். அன்றுதான், வெள்ளையராட்சி தேவரைக்குறிவைத்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் விரோதி தேவருக்கு இவ்வளவு மக்கள் செல்வாக்கா என்று ஆத்திரப்பட்டது. சி.டி.ஆக்டை ரத்து செய்ய தேவர் தொடர்ந்து போராடினார். கடைசியாக சி.டி.ஆக்ட் ஒழிந்தது. சி.டி.ஆக்டை எதிர்த்து தேவருக்கு முன்பே போராடிய தலைவர்களில் ஜார்ஜ் ஜோசப் எனற ஆங்கிலேயரும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தான் பிறந்த குலத்திலே ஒரு கறையாகப்படிந்திருந்த சி.டி.ஆக்ட்டை ஒழித்து வெற்றிகண்டது தேவர் திருமகனின் சிறந்த சமூகத் தொண்டு ஆகும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.