Monday, August 27, 2018

மணியாச்சி-ஜமீன்

இதுவரை வணக்கம் மும்பை என்னும் மும்பையில் இருந்து வெளிவரும் வார இதழலில் 146 வாரம் நட்டாத்தி, சாத்தான்குளம், குளத்தூர், சேத்தூர், இளையரசனேந்தல் ஜமீன்தார்கள் குறித்த வரலாறு எழுதி வந்தேன். தற்போது மணியாச்சி ஜமீன்தார் குறித்து எழுதப்போகிறேன். அந்த வரலாற்றை எனது வெப்சைட் மூலமாக உங்களோடு வாரம் வாரம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி.
147. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
&முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
நான் பல ஆண்டுகளாகவே மணியாச்சி ஜமீன் வரலாற்றை பற்றி அறிவதற்காக பல முயற்சிகள் எடுத்து வந்தேன். வசந்த் தொலைக்காட்சியில் மணியாச்சி ஜமீன் வரலாறு படமெடுக்கும் போது நெல்லையில் வைத்து மணியாச்சி ஜமீன்தாரை சந்தித்தார்கள் நமது குழுவினர்.
அவர் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தான் ஜமீன்தார் வாரிசுதாரர் பணியாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தது. நான் ஒருமுறை சென்ற போது அவரை நான் சந்திக்க முடியவில்லை
ஆனால் நமது குழுவினர் அவரை சந்தித்து, வசந்த் தொலைக்காட்சி தொடருக்காக நாள் குறித்து, ஜமீன்தார் வாரிசுதாரை பேச வைத்தார்கள். நான் எட்டயுரம் ஜமீன்தார் தகவல் திரட்ட எட்டயபுரம் சென்ற காரணத்தினால் அவரை சந்திக்க இயலவில்லை. எனவே தான் மணியாச்சி ஜமீன்தார் வரலாற்றை, நான் விகடன் பிரசுரத்தில “நெல்லை ஜமீன்தார்” புத்தகத்தில் சேர்க்க இயலவில்லை.
அதேபோல் தினகரன் ஆன்மிக பலனில் “ஜமீன் கோயில்கள்” தொடர் எழுதும் போது கடம்பூர் ஜமீன்தாரை எழுதி விட்டு, அப்படியே மணியாச்சி வந்து விட்டேன். மணியாச்சியில் திரும்பும் இடங்களில் உள்ள கோயில்கள் எல்லாவற்றிலுமே ஜமீன்தார் வரலாறு மின்னிக் கொண்டிருந்தது.
தற்போது காண்பதற்கு சிறிய ஊராக இருக்கிறது மணியாச்சி. நெல்லை & குறுக்குசாலை சாலையில் மிகச்சிறிய கிராமம் தான். ஒரு போலீஸ் ஸ்டேஷன், இரண்டொன்டு டீ கடை, அப்படியே நடந்து போனால் கூட ஊரை கடந்து விடலாம் அந்த அளவுக்கு மிகச்சிறிய ஊர்தான். இங்குள்ள மக்களும் விவசாயம் செய்ய இயலாத வானம் பார்த்த பூமிக்கு சொந்த காரர்கள். இவர்கள் அனைவருமே ரயில் நிலையத்தினை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறார்கள். மணியாச்சி சந்திப்பு என்றால் நெல்லை & தூத்துக்குடி & மதுரை இணைப்பாக இருப்புப்பாதை இருக்கிறது. இங்கு நின்று செல்லும் ரயிலில் நேரத்துக்கு ஏற்றபடியாக வியாபாரம் செய்வது தான் இவ்வூர் மக்களின் அன்றாட பிழைப்பு.
ரயில் நிலையம் எவ்வளவு பிரபலமோ.. அது போலத்தான் ஜமீன்தாரும் பிரபலமானவர்.
நான் மணியாச்சி ஜமீன்தார் அரண்மனையை பார்த்தேன். சாலைக்கு கீழ்புறம் இருந்தது. தற்போது ஒரு பகுதி மட்டுமே நமக்கு கண்ணில் பட்டது. ஆனால் இந்த அரமண்மனை மிகவும் சிறப்பு பெற்றதாக விளங்கியுள்ளது. ஒரு காலகட்டத்தில் திருச்செந்தூர் வரை மணியாச்சி -ஜமீன் எல்கை விளங்கியுள்ளது.
இதையெல்லாம் அறிந்தோம். ஆனால் ஜமீன்தாரிடம் பேசினால் மட்டுமே முழு விவரம் தெரியும். எனவே கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாக இருந்தது.
ஆனாலும் மனம் தளரவில்லை. எப்படியாவது ஜமீன் கோயில்களில் இதுவரை எழுதாத, சாத்தன் ஜமீன், நட்டாத்தி ஜமீன், குளத்தூர் ஜமீன், கடம்பூர் ஜமீன், சேத்தூர் ஜமீன், சாப்டூர் ஜமீன் எழுதியது போலவே மணியாச்சி ஜமீன்தாரையும் எழுதி விட வேண்டும் என முயற்சி செய்தேன்.
அப்போது தான் ஜமீன்தார் அரசு பதவியில் இருந்து ஓய்வுபெற்று தற்போது செங்கோட்டையில் வசிப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் பல முறை செல்போன் மூலமாக தகவல் சேகரிக்க முயற்சி செய்தும் எழுத இயலாமலேயே போய் விட்டது.
இதற்கிடையில் தொடர் முடிந்தது.
தற்போது சூரியன் பதிப்பகம் ஜமீன் கோயில்கள் தொடரை நூலாக வெளியிட்டு விட்டது.
இனி எப்போது மணியாச்சி ஜமீன்தாரை பற்றி எழுத போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான், எனக்கு செங்கோட்டை நூலகர் ராமசாமி அவர்களுடைய நட்பு கிடைத்தது. முன்னேற்றப் பதிப்பகம் நாகர்கோயிலில் நடத்திய புத்தக கண்காட்சியில் வைத்து தான் நான் அவரை சந்தித்தித்தேன்.
என்னுடைய “தோரணமலை யாத்திரை” நூலை செங்கோட்டை நூலகத்தில் வைத்து திறனாய்வு செய்தார்.
அவர் திறனாய்வே மிக வித்தியாசமாக இருந்தது. தோரண மலை யாத்திரை 30 நூலை வாங்கி அவர் மாணவ மாணவிகளிடம் கொடுத்து அதை படித்து கட்டுரை எழுத வைத்துக் கொண்டிருந்தார்.
என் நூலை 62 பேர் திறனாய்வு செய்திருந்தார்கள். அதன் பிறகு தான் செங்கோட்டை மக்களில் வாசிப்பு ஆர்வம் என்னை பிரமிக்க வைத்தது. அதனால் தான் ராமசாமி அய்யா மீது எனக்கு பற்றுதல் அதிகரித்தது.
அதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளர் சுதாகர் எழுதிய “கவிதை பூக்கள்” நூலை சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் கோதண்டம் அவர்கள் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். அந்த நூல் வெளியிட்டு விழாவிற்கு நான் செங்கோட்டை சென்று இருந்தேன்.
அப்போது தான் மணியாச்சி ஜமீன்தாரை பற்றி விசாரித்தேன். உடனே எனக்கு ராமசாமி அய்யா ஏற்பாடு செய்தார்.
கற்குடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சேகர் அவர்களைத் தான் என்னோடு ஜமீன்தார் வீட்டை காட்டுவதற்காக அனுப்பி வைத்தார்.
சேகர் அவர்கள் பழக இனிமையாக இருந்தார். எங்களை பாசத்துடன் கூட்டிச்சென்றார். அவர் இரு சக்கர வாகனத்தில் முன்னே செல்ல நாங்கள் எனது காரில் பின்தொடர்ந்தோம். வாகனம் நூலகத்தில் இருந்து கிளம்பியது.
மணியாச்சி ஜமீன்தார், செங்கோட்டையில் மணியாச்சி ஜமீன்தாராக வாழவில்லை. அவருக்கு அவ்வூரில் “கம்பீரம்” என்ற பெயர். பலருக்கும் கம்பீரம் என்றால் தான் அவரை தெரிகிறது.
செங்கோட்டையில் நன்கு அறிமுகமானவர் அவர். எல்லோருக்கும் அறிமுகமானவரான அவரை நான் சந்திக்காமல் இருந்தது என் துரதிஷ்டம்.
அவரை பார்க்கவேண்டும் என்ற ஆவல் என்னை தொற்றிக்கொள்ள மேலும் ஆர்வம் அதிகரித்தது. வாகனம் வளைவான பாதை வழியாக சென்று, அதன் பின் திரும்பி மீண்டும் ஒருபிரதான சந்தில் கிளம்பியது.
இருபுறமும் வான் உயர்ந்த மாளிகைள் காணப்பட்டது.
வாகத்தினை ஓரமாக நிறுத்தி விட்டு நாங்கள் சேகர் அவர்களுடன் நடந்து சென்றோம். சிறிது தூரம் நடந்தவுடன் பிரமாண்டமான மாளிகை ஒன்றை அடைந்தோம்.
அந்த இடம் தான் மணியாச்சி ஜமீன்தார் தற்போது வசிக்கும் அரண்மனை.
அங்கே தான் கம்பீரமாக மணியாச்சி ஜமீன்தார் வாரிசு சிரித்த முகத்துடன் முறுக்கிய மீசையுடன் நவீன ஜமீன்தாராக எங்கள் முன் தோன்றி வரவேற்றார்.
(இன்னும் வருவார்கள்)

148. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
-முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
நாங்கள் மணியாச்சி ஜமீன் வாரிசுதாரர் கம்பீரம் அய்யா வீட்டுக்கு நுழைந்தவுடனே இன்முகத்துடன் வரவேற்றார். எங்களை அவரது மாடியில் உள்ள வரவேற்பு அறைக்கு கூட்டிச்சென்றார்.
சிரித்த முகத்துடன் எங்களிடம் பேச ஆரம்பித்தார். ‘அய்யா, மணியாச்சி ஜமீன் மிகப்பெரிய ஜமீன் ஒரு காலத்தில் எங்கள் ஜமீன்தார் ஆங்கிலேயருடன் ஒத்து போகாத காரணத்தினால் ஜமீன் சுருங்கி விட்டது’ என்றார்.
இனி என்ன அவருடைய உரையாடைலை வைத்துக் கொண்டே நமது கட்டுரையின் வரலாற்றை தொடர்ந்து கூறலாம்.
மணியாச்சி.
இந்த பெயர் விளங்க காரணமே ஜமீன்தார் தான். எப்படி?
ஜமீன்தாரின் சின்னம் மணி. மணி சின்னத்துக்கு சொந்தமான ஜமீன்தார் ஆட்சி செய்யும் இடம் தான் மணியாச்சி ஜமீன். என்று ஜமீன்தார் வாரிசுதாரர் கம்பீரம் அய்யா எங்களிடம் கூறியவுடனே ஆகா.. என சபாஷ் போட வைத்தது. இந்த வழியாக இரயிலில் பயணம் செய்யும் போதெல்லாம். ‘மணி ஆச்சி… சீக்கிரமா வண்டியை எடுங்க’ என்று சொல்வது நினைவு வந்தது. அதனால் தான் இந்தபெயர் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு ஜமீன்தார் கூறியவுடனே உண்மை நிலை புரிந்தது.
அப்படியென்றால் மிகவும் பழமையான ஜமீன் மணியாச்சி ஜமீன்தார் தான்.
பாளையக்காரர்கள் உருவாகத்தின் போது தென்னகத்தில் 72 பாளையங்களுள் இதுவும் ஒன்றாகவே இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது கிழக்கு பாளையத்தினை நாயக்கர்களும், மேற்கு பாளையத்தினை மறவர்களும் ஆண்டு வந்தனர். அதில் முக்கிய மறவர் ஜமீனில் மணியாச்சி ஒன்றாக விளங்கியுள்ளது. பாளையத்தில் கொண்டயங்கோட்டை மறவர்கள் 8 பேர் ஆண்டு வந்தனர்.
அவர்கள் ஊத்துமலை, மணியாச்சி, கடம்பூர், நெல்கட்டும் செவல், சுரண்டை, நடுவக்குறிச்சி, சொக்கம்பட்டி, தலைவன் கோட்டை ஜமீன்தார்கள் ஆவார்கள். இவர்களில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்தவர்களில் மணியாச்சி ஜமீன்தாரும் ஒருவர்.
இவர்களின் பணி, வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்தி விட்டு, மீதி பணத்தினை வைத்து சுகபோகமாக வாழ்வதே. ஆனால் அதையும் தாண்டி மக்கள் நல்லாட்சியில் சிறப்புற்று விளங்கினார்கள் மணியாச்சி ஜமீன்தார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இறை பணியிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள்.
மணியாச்சி ஜமீன்தார்கள் பூலோகபாண்டிய தலைவன் என்ற பெயரிலேயே விளங்கியுள்ளனர். ஒரு தலைமுறையினர் இந்த பெயரில் விளங்கினார்கள் என்றால் அடுத்த ஜமீன்தார் சுப்பிரமணிய பாண்டிய தலைவர் என்று பெயர் பெற்று விளங்கியுள்ளார்.
ஜமீன்தாரின் எல்கை வடக்கே ஏழாயிரம் பண்ணையில் இருந்து துவங்கியுள்ளது. மேற்கே மருகால்தலை, சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றங்கரை, கிழக்கே குறுக்கு சாலை, தெற்கே திருச்செந்தூர் கடல் வரை இவரது ஆட்சி எல்கை இருந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க மணியாச்சி ஜமீன்தார் வரலாறோடு இணைந்து சீவலப்பேரி மறுகால்தலை மலைக்கோயிலான ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோயில் தல வரலாறாக மிளிர்கிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஆப்பநாடு பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தான் மணியாச்சி ஜமீன்தார். அவருடன் இந்த பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தவர்கள் பலர். இதில் ஏழுபேர் தொழில் நிமித்தமாக தென்திசை நோக்கி சென்றனர். சரியான தொழில் கிடைக்காத காரணத்தினால் மலையாள தேசம் செல்கின்றனர்.
பல இடங்களில் தொழில் செய்கிறார்கள். அங்கிருந்து பொருள் ஈட்டி புறப்படும் தருவாயில் அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் இவர்களை திருடர்கள் என நினைத்தனர். இவர்களை தாக்கி பொருட்களை மீட்க முற்படுகின்றனர்.
உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் விடவில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டு இவர்களை துரத்தினர். இவர்கள் அப்பகுதியில் ஓங்கி உயர்ந்த அடர்த்தியாய் வளர்ந்து நின்ற பூலாத்தி செடிகள் நிறைந்த புதருக்குள் நுழைந்து மறைவாக பதுங்கி கொள்கின்றனர்.
துரத்தி வந்தவர்கள் புதர் அருகே வந்து பார்க்கின்றனர். யாருடைய தலையும் தென்படவில்லை. அப்போது யானை பிளிரும் சத்தம் கேட்க துரத்தி வந்தவர்கள் பயந்து திரும்பி ஓடி விடுகின்றனர்.
புதர் மறைவில் பதுங்கியிருந்த ஏழுபேரும் வெளியே வந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று பெருமூச்சு விடும் போது அவர்கள் கண்ணில் பச்சை மண்ணால் செய்த சாஸ்தா சிலை தென்பட்டது. இந்த யானை வாகனத்தான் சாஸ்தா தான் நம்மை காப்பாற்றினார். ஆகவே இந்த சாஸ்தாவை நமது ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினர்.
அந்த சிலையை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்படுகின்றனர். மலையாள தேசத்தில் இருந்து நாகர்கோயில் வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுது உண்ணாக்குடி கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு வருகின்றனர்.
அங்கு சிலையை இறக்கி வைத்து விட்டு உணவு சமைத்து உண்கின்றனர். உண்டு களித்து ஓய்வு எடுத்தனர். அதன்பின் மீண்டும் பயணத்தை தொடர சிலையை எடுக்க முற்பட்டனர். அப்போது சிலையின் கால் பாதம் பிய்ந்து தரையில் பதிந்து விடுகிறது. பாதம் உடைந்த சிலையோடு பயணத்தை தொடர்ந்தனர்.
அடுத்த வேளை உணவுக்காக தென்திருப்பேரை அருகிலுள்ள கடம்பாகுளம் கரையில் சிலையை இறக்கி வைக்கின்றனர். உணவு சமைத்து உண்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அதன்பின் சிலையை எடுக்கும் போது சிலையின் இடுப்புக்கு கீழ்பகுதி பிய்ந்து தரையில் பதிந்து விடுகிறது.
சிலையின் தலை மற்றும் மார்புடன் கூடிய பகுதியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படுகின்றனர். சீவலப்பேரி மறுகால்தலை மலைப்பகுதிக்கு வந்துச் சேர்கின்றனர். உடைபட்ட சிலையை ஊருக்குள் கொண்டு போக வேண்டாம் என நினைத்தனர். எனவே மலை மேலுள்ள பாறை மீது வைத்து விட்டு ஏழுபேரும் தங்கள் ஊரான மணியாச்சிக்கு சென்று விட்டனர்.
நாட்கள் சில நகர்ந்தன. இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு மணியாச்சி அரண்மனையை சேர்ந்த பசுமாடுகள் வந்தன.
அதில் ஒரு பசு மாடு செய்த காரியம் அனைவரையும் திடுக்கிட வைத்தது.
( இன்னும் வருவார்கள்)
149. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
– முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
நாட்கள் சில நகர்ந்தது. இந்நிலையில் மருகால்தலை மலைஅடிவார பகுதிக்கு மேய்ச்சலுக்கு மணியாச்சி அரண்மனை பசு மாடுகள் வந்தன. அதில் ஒரு பசு மாடு தினமும் மலையேறியது. அங்கு மணியாச்சி மக்கள் வைத்து விட்டு சென்ற சாமி சிலை மேல் பாலை தானே சொரிந்தது.
வாரம் ஒன்று கடந்தது. இந்நிலையில் பால் கறக்கும் கோனார் அதிர்ச்சி அடைந்தார். எப்படி இது நடக்கிறது. காலையில் பால் கறக்கும் பசுமாடு மாலையில் பால் கறக்கவில்லையே ஏன் என்று தமக்குள்ளேயே கேட்டுக்கொண்டார்.
எனவே அவர் அரண்மனைக்காரரிடம் சென்றார். ‘அய்யா குறிப்பிட்ட அந்த பசுமாடு மட்டும் காலையில் பால் கறக்கிறது. மாலையில் மடுவில் பால் இல்லை. என்ன ஏது என்று தெரியவில்லை’ என்று கூறினார். அப்படியென்றால் அந்த மாட்டை கண்காணிக்க வேண்டும். அந்த மாட்டிலிருந்து யாரோ பாலை கறக்கிறார்கள். அல்லது மாடு மேய்க்கும் யாரோ ஒருவர் கள்ளத்தனமாக பாலை கறந்து வியாபாரம் செய்கிறார்கள். யார் அவர்? அரண்மனை மாடு என்று தெரிந்தும் களவாடும் அந்த கயவன் யார்? என்று திருடனை கண்டு பிடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக ஐந்து நபர்களை நியமனம் செய்கிறார்கள். அந்த ஐந்து பேர் ஆங்காங்கே நின்று பசுமாட்டை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று வழக்கம் போல அந்த பசுமாடு மலை அடிவாரத்துக்கு வந்தது. அதன் பின் ஒரு துள்ளலில் மலை உச்சிக்கு ஓட்டம் ஓட்டமாக ஓடியது. அதை கண்காணித்த வரும் பின்னாலேயே ஓட ஆரம்பித்தார். மலை மேலே போய் பார்த்த பிறகு அவர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
அங்கு உள்ள சாஸ்தாவின் சிலைக்கு அந்த பசு பால் சொரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து மற்றவர்களும் அங்கே ஓடிவந்தனர். அதோடு மட்டுமல்லாமல் மாடு மேய்த்தவர்களும் அங்கே ஓடி வந்தனர். இந்த சம்பவத்தினை அனைவரும் பார்த்து வியப்புற்றனர்.
இந்த தகவலை உடனே அரண்மனைக்காரரிடம் ஓடிப்போய் தெரிவிக்கின்றனர். மறுநாள் அவரும், ஊராரும் திரண்டு வந்து பார்க்கின்றனர். அவர்களுடன் சிலையை கொண்டு வந்த ஏழு பேர்களும் அங்கு வந்து விட்டனர். தாங்கள் விட்டு விட்டு சென்ற சிலையை பார்க்கின்றனர்.
பசுவின் செயலும் சாமி சிலையின் மகிமையையும் கண்டு மெய்சிலிர்த்து நின்றனர். இந்த சமயத்தில் தான் கூட்டத்தில் அருள் வந்து ஆடினார் ஒருவர். தான் சாஸ்தா என்றும், எனக்கு இங்கே பூரண, புஷ்கலையுடன் சிலை அமைத்து கோயில் எழுப்ப வேண்டும் என்றும், எனது கோட்டைக்கு காவலாய் பேச்சி, மலையழகு (பிரம்மசக்தி) சிவனணைந்த பெருமாள், கருப்பன், கொம்புமாடன் உள்ளிட்ட இருபத்தியோரு பந்தி தெய்வங்களுக்கும் நிலையம் கொடுக்க வேண்டும்’ என்று அருள்வாக்கு கூறினார்.
அதன்படியே மணியாச்சி அரண்மனை சார்பில் ஜமீன்தார் கோயிலை எழுப்பினார். பூலாத்தி செடிகளிடையே இருந்து எடுத்து வரப்பட்டதால் அவருக்கு ‘பூலா உடையார் சாஸ்தா’ என்று பெயர் வைத்து அழைத்தனர். இதுவே மருவி பிற்காலத்தில் பூலுடையார் சாஸ்தா என்று அழைக்கப்பட்டது.
மணியாச்சி அரண்மனை ஆளுகைக்குள்பட்ட பகுதியில் வசித்து வந்த பலதரப்பட்ட சமுதாய மக்களும் பூலுடையார் சாஸ்தாவை தங்கள் குலதெய்வமாக வணங்க ஆரம்பித்தனர். நாளடைவில் இந்தப் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் வாழையடி வாழையாக தங்கள் குலதெய்வமான பூலுடையார் சாஸ்தாவை குடும்பத்துடன் வந்து வணங்கி வருகின்றனர்.
மேலும் சாமி சிலை மீது பசுமாடு பால் சொரிந்து மலைப்பாறையில் சுண்ணாம்பு கரைசல் ஊற்றி விடப்பட்டு அந்த இடத்தில் பால் வடிந்த மாதிரியான காட்சியை தற்போதும் காணலாம்.
மேலும் சுரைக்கொடி பற்றி இரு விதமான தகவல்கள் சொல்லப்படுகிறது. துரத்தி வந்தவர்களிடமிருந்து தப்பிக்க இந்த ஏழு பேருக்கும் சுரைக்கொடி உதவியதாக சொல்லப்படுகிறது. மற்றொன்று சாமி சிலையை தூக்கி கொண்டு வரும்போது சுரைக்கொடி தட்டி விட்டு சாமி சிலை சேதம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால் பூலுடையார் சாஸ்தாவை குலதெய்வமாக வணங்கும் மக்கள் வாழையடி வாழையாக சுரைக்காயை சமைத்து உண்பதில்லை என்ற விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.
மேலும் இக்கோயிலின் தல விருட்சமான புளியமரத்திலிருந்து வருடத்திற்கு ஒரே ஒரு பூ பூத்து அது பிஞ்சாகி காயாகி பழமாகி அதை பறித்து தான் பங்குனி உத்திர திருவிழாவிற்கு பானகம் கரைத்து சாமிக்கு நிவேதனம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இத்திருக்கோயில் பூசாரிகள் ஆறுபேரில் வாரத்திற்கு ஒருவர் வீதம் சுழற்சி முறையில் தினந்தோறும் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து ஒரு செம்புக்குடத்தில் புனித நீர் எடுத்து தலையில் வைத்து கால்நடையாக நடந்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்து பூஜை வழிபாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த அபூர்வ கோயிலில் புத்ரபாக்யம் வேண்டி ஒவ்வொரு தமிழ் மாத கடைசி சனிக்கிழமை தோறும் மாதாந்திரம் தொடர்ந்து வந்து சாஸ்தாவிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளும் தம்பதியருக்கு புத்ரபாக்யம் கிடைக்கிறது.
இத்திருக்கோயிலில் சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திர திருநாளன்று பங்குனி உத்திர பெரு விழாவாக மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவில் பூலுடையார் சாஸ்தாவை குலதெய்வமாக வணங்கும் அனைத்து மக்களும் தவறாமல் குடும்பத்துடன் வந்து தங்குகிறார்கள். சாமிக்கு பொங்கலிட்டு காவல் தெய்வங்களுக்கு கிடாய் வெட்டி சாமி கும்பிடுகிறார்கள். ஒருநாள் கோயிலில் தங்கி உணவு சமைத்து உண்டுவிட்டுதான் தங்களது இருப்பிடங்களுக்கு செல்கின்றனர். பங்குனி உத்திரம் முடிந்து எட்டாம் கொடை சிறப்பு பூஜை வழிபாடுகள், புரட்டாசி கடைசி சனி சிறப்பு பூஜை வழிபாடுகள், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை வழிபாடுகள், திருக்கார்த்திகை அன்று மலைமீது மகாதீபம் ஏற்றி சிறப்பு பூஜை வழிபாடுகள் போன்ற விசேஷ வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்து விசேஷ நாட்களிலும் அன்னதானம் நடைபெற்று வருகின்றது.
இன்று பொதுமக்களே தலைவர் ஒருவரை அமைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். மணியாச்சி ஜமீன்தார்கள் தான் இந்த கோயிலை அமைத்தவர்கள் என்பதால் அவரது வாரிசுகள் தற்போதும் இக்கோயிலுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர்.
எப்படி?
(இன்னும் வருவார்கள்)
ணியாச்சி ஜமீன்தார்கள் வணங்கி வரும் கோயில்களில் மிகவும் சிறப்பான கோயில் மருகால் தலைமலை சாஸ்தா கோயிலாகும். இந்த கோயில் ஜமீன்தார்களின் கோயில் என்று கூட அழைக்கலாம். அந்த அளவுக்கு அதிகமான ஜமீன்தார்களுக்கு இந்த கோயில் குல தெய்வமாக உள்ளது.
குறிப்பாக மணியாச்சி, நெற்கட்டும் செவல், கடம்பூர் ஜமீன்தார்களுக்கு இவர் தான் குலதெய்வம். அது மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்தில் மிக அதிகமானவர்கள் இவரை குல தெய்வமாக கொண்டுள்ளனர்.
ஜமீன்தார்கள் இந்த கோயிலை தங்களது கண்ணின் இமைகளாகவே பாதுகாத்தனர். எனவே பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு திருப்பணிகளை இக்கோயிலுக்கு செய்து வருகிறார்கள் ஜமீன்தார்கள்.
இந்த கோயிலுக்கு சாஸ்தாவை கொண்டு வந்தது மணியாச்சி ஜமீனை சேர்ந்தவர்கள் என்றும். மணியாச்சி ஜமீன் பசுமாடு மூலமாகத்தான் சாஸ்தா வெளியானார் என்றும் நாம் அறிந்தோம்.
இந்த ஆலயத்தில் திருவிழாவே மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. வருடங்தோறும் பங்குனி உத்திரத்தில் பலலட்சம் மக்கள் இங்கு கூடுவார்கள். தாமிரபரணி ஆற்றங்கரையில் சீவலப்பேரி அருகில் மலைமீது அமர்ந்திருக்கும் இந்த கோயிலின் மறுபுறம் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் 2 ஆயிரம் வருடம் பழமையான சமணர் சிறபங்கள் காணப்படுகிறது. வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதை பஞ்ச பாண்டவர்களின் படுகை என்றும் கூறுகிறார்கள். பஞ்ச பாண்டவர்கள் பாஞ்சாலியோடு வனவாசம் செய்தபோது இந்த இடத்தில் தான் தங்கினார்கள் என்ற கூற்றும் உண்டு. அந்த அளவுக்கு மிகவும் பழமையான மலை மருகால்தலை மலை.
ஒரு காலத்தில் மலை மீது உள்ள இந்த கோயிலுக்கு செல்வது கடினம்.
எனவே கோயில் நிர்வாகிகள் படிகட்டி ஏறி செல்லும் பக்தர்கள் இளப்பாறிச் செல்ல நடவடிக்கை எடுத்தனர். கோயில் முன் மண்டபம் கட்டி ராஜகோபுரம் கட்ட நினைத்தனர். இதற்காக கடம்பூர் ஜமீன்தாரும் இந்த திருப்பணியில் சேர்ந்து கொண்டார். கடம்பூர் ஜெகதீஸ் ராஜா, மணியாச்சி ஜமீன்தார் வீட்டில் பெண் எடுத்தவர். எனவே அவரும் மணியாச்சி ஜமீன்தாரோடு திருப்பணியில் சேர்ந்து கொண்டார். பக்தர்களும் இந்த திருப்பணியில் திரளாக கலந்து கொண்டார்கள்.
2013 முதல் 2016 வரை நடந்த திருப்பணியில் கமிட்டியில் ஒருவராக அங்கம் வகித்தார் ஜெகதீஸ் ராஜா. இவர் மணியாச்சி ஜமீன்தாருடன் சேர்ந்து கோயிலுக்கு முன் மண்டபமும், ராஜாகோபுரம் அமைத்தார்.
இதற்கான கல்வெட்டுகள் கோயில் முன்பு உள்ளது. மணியாச்சி ஜமீன்தார் பாலசுப்பிரமணிய ராஜா, சரவண ராஜா, கார்தீஸ் ராஜா ஆகியோருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதுபோல பல திருப்பணிகள் நடந்து இன்று மருகால் தலை சாஸ்தா கோயில் கம்பீரமாக காட்சிதருகிறது.
படிகள் அமைப்பதற்கு உதவியாக கடம்பூர் ஜமீன்தார் மாணிக்கராஜா 50 ஆயிரம் வரை நிதி உதவி அளித்துள்ளார். இதற்கான கல்வெட்டுகள் கோயில் வளாகத்தில் உள்ளது. அதில் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, ரேவதி நாச்சியார் கடம்பூர் ஜமீன் அம்பதாயிரத்து ஒன்று என கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலுக்கு ஜமீன்தார்கள் குடும்பத்துடன் வருவார்கள். ஜமீன்தார்கள் ஆண்ட காலத்தில் ஜமீன்தாரினிகள் கூட்டத்துக்குள் வரமாட்டார்கள்.
ஆனாலும் தங்கள் முன்னோர்கள் வணங்கிய சாஸ்தாவை திருவிழாக்களில் காணவேண்டும் என்று பங்குனி உத்திரத்திற்கு கோயிலுக்கு வருவார்கள். உடனே அவர்கள் தங்க மற்றவர்களை போல ஆங்காங்கே திறந்தவளியில் தங்க மாட்டார்கள். மாறாக ஜமீன் பெண்கள் தங்க என்று சிறப்பாக திட்டமிடப்பட்ட குகை போன்ற மண்டபங்கள் அமைப்பு தற்போது கோயில் வளாகத்தில் உள்ளது. அவர்கள் தங்கி செல்ல பூமிக்குள் அமைந்த மண்டபங்கள் அமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குகை மண்டபம் தற்போதும் காணப்படுகிறது. ஆனால் மணல் மூடி பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
மருகால் தலை மட்டுமல்லால் மணியாச்சி கிராமத்தில் உள்ள தெய்வ கோயில்களிலும் மணியாச்சி ஜமீன்தார்களின் திருப்பணி நடந்து வருகிறது.
இந்த இறைபணிதான் மணியாச்சி ஜமீன்தார்களை தலைநிமிர்ந்து வைக்க செய்கிறது. மற்ற ஜமீன்தார்கள் அரண்மனை இழந்து, அரசை இழந்து, நிலங்களை இழந்து வாழ்வதை அவர்கள் வரலாற்றில் மூலம் நாம் கண்டு வருகிறோம். ஆனால் மணியாச்சி ஜமீன்தார் மட்டும், பொன்னும் பொருளையும், புகழையும் இழக்காமல் அவர்களின் ஆலய திருப்பணி மூலமாக ஜமீன்தார் போன்றே தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் மீதும், இவர்களின் அரண்மனை மீது பொதுமக்கள் பற்று வைத்து இருக்கிறார்கள். இதனால் தான் மணியாச்சியில் உள்ள கோயிலில் திருவிழாக்கள் என்றால் ஜமீன்தார் இல்லாமல் திருவிழா நடப்பதே இல்லை.
இங்குள்ள ஒவ்வொரு கோயிலும் மகராஜாவின் பெயரை கூறிக் கொண்டே இருக்கிறது.
அதைபற்றி தொடர்ந்து பார்க்கும் முன்பு ஜமீன்தார் தீர்ப்புசொல்லும் விதமே மிக விசேஷமாக கருதப்படுகிறது. அது குறித்து நாம் காணலாம்.
எல்லா இடத்திலும் ஜமீன்தார் தீர்ப்பு கூறும் இடம் அரண்மனைக்குள்தான் இருக்கும். ஆனால் மணியாச்சி ஜமீன்தார் அரண்மனை வாசலில் உள்ள கல்படியில் அமர்ந்து தான் தீர்ப்பு சொல்வாராம்.
அதோடு மட்டுமல்லாமல் குற்றவாளியை கண்டுபிடித்து அவர்கள் கொடுக்கும் தண்டனையும் வித்தியசமாகத்தான் இருக்கிறது.
அது என்ன தண்டனை?
151. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
-முத்தாலங்குறிச்சி காமராசு
மணியாச்சி ஜமீன்தார்
மணியாச்சி ஜமீன்தார்கள் தீர்ப்பு சொல்லும் விதமே விசேஷமாகத்தான் இருந்துள்ளது.
மற்ற ஜமீன்தார்கள் அரண்மனையில் உள்ள தர்பார் மண்டபத்தில் வைத்து தான் தீர்ப்பு கூறுவார்கள்.
ஆனால் மணியாச்சி ஜமீன்தார் அப்படியல்ல. மணியாச்சி அரண்மனையில் உள்ள கல் வாசலில் அமர்ந்து தான் தீர்ப்பு கூறுவார்கள்.
புகார் கொடுத்துவரை அழைத்து புகார் சம்பந்தப்பட்டவரிடம் நன்கு விசாரிப்பார். அதோடு மட்டுமல்லாமல் சாட்சிகளையும் விசாரிப்பார். மேலும் புகார் கொடுத்தவுடனேயே தனது ஒற்றர்களை அனுப்பி சம்பவம் நடந்த இடத்தில் இருந்து உண்மை நிலையை விசாரித்து வர செய்வார்.
எனவே எவர் தவறு செய்தார் என்பதை ஜமீன்தார் அரண்மனை வாசலுக்கு வரும் முன்பே தெரிந்து கொள்வார். எனவே தீர்ப்பு கூற ஜமீன்தார் தெளிவாக வந்து படியில் அமர்வார். அவருடைய கண்கள் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி கருணையுடனும், தப்புச் செய்தவர்கள் மீது தங்கள் தெய்வமான கொத்தாள முத்துவை போல உருட்டும் விழியுடன் காட்சியளிக்கும்.
இவர்கள் தண்டனையே வித்தியாசமானதாக விளங்கிறது. சிங்கம்பட்டி ஜமீன்தாரை பொறுத்தவரை களவு செய்தவர்களை தோலை உரிக்கும் தண்டனை கொடுப்பார்கள் என கேள்வி பட்டிருக்கிறோம்.
அதாவது ஒருவர் தப்பு செய்தார் என்றால் அவரது உடையை கழற்றி உப்பை ஊர வைத்து அவர் முதுகில் பூசுவார்கள். அதன் பின் சாக்கை அதன் மீது மூடி விடுவார்கள். மறு நாள் சாக்கை எடுக்கும் போது தோல் உறிந்து விடும். அப்படி தோலை உறிக்கும் போது ஏற்படும் வேதனை இருக்கிறதே… அதை எழுத்தால் கூறி விட முடியாது. தண்டனை பெறுபவர்கள் போடும் சத்தம் பொதிகைமலை வரை கேட்கும். இது போன்ற கடுமையான தண்டனை கிடைத்தால் யாரும் தப்பு செய்வார்களா?. இல்லை தப்பு செய்யதான் முயலுவர்களா?. ‘தப்பு பண்ணினா தோலை உறிச்சி புடுவேன்’ என்று பெரியவர்கள் சொல்வார்களே அந்த சொல்லே சிங்கம்பட்டி ஜமீன்தார் கொடுக்கும் தண்டனையால் தான் உருவானது என்பார்கள்.
அதுபோலவே தலைவன் கோட்டை ஜமீன்தாரை பேய்துரை என்று அழைப்பார்கள். அவருக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டால் பிடிக்கவே கிடையாது. குறிப்பாக எங்கேயாவது குழந்தை அழும் சத்தம் கேட்டால் போதும் உடனே அந்த குழந்தையின் தாயாருக்கு பிரம்படி கொடுத்து விடுவார். இவர் மிகப்பெரிய சித்தர். அம்மனை நோக்கி கடுந்தவம் புரிந்தவர். குழந்தை அழுதால் தெய்வமே அழுவது போன்றது என்று கூறுபவர். இதற்கே இப்படி தண்டனை கொடுத்தால் தப்பு செய்தவர்களை விட்டு வைப்பாரா என்ன?
இதுபோல ஜமீன்தார்களின் தண்டனை தப்பு செய்தால் கடுமையாகத்தான் இருக்கும். ஆனால் மணியாச்சி ஜமீன்தார் அப்படி அல்ல.
அவர்களின் தண்டனை இறைவனை சார்ந்தே இருக்கும். அப்படி என்ன தண்டனை–? அவர்கள் வழங்கும் தண்டனைக்கு ஒரு பெயரும் இருக்கிறது.
‘தெண்டம் விடுதல்’ என்பது தான் அதற்கு பெயர்.
அதாவது. தண்டனை பெறுபவர் அவர் செய்த தவறுக்கு ஏற்ப எண்ணெய் வாங்கி வரவேண்டும். அந்த எண்ணெயை கொத்தாளசாமி கோயில் முன்புள்ள விளக்கில் ஊற்றுவார்கள். பின் விளக்கேற்றப்படும்.
அந்த விளக்கு அணையும் வரை தப்பு செய்தவர் விழுந்து விழுந்து வணங்க வேண்டும். இதுதான் தண்டனை. அந்த விளக்கு விரைந்து எரிந்து முடிந்தால் தெய்வம் மன்னித்து விட்டது என்று அர்த்தம். ஆனால் முடியவில்லை என்றால் அவருக்கு மேலும் தண்டனை சாமி கொடுக்கிறது என்பது அர்த்தம்.
இதற்கு பயந்து போய் யாருமே தப்புசெய்யமாட்டார்கள். பயந்து ஓடுங்கி இருப்பார்கள். களவு தொழில் போன்றவற்றை அறவே செய்ய மாட்டார்கள்.
இது ஒரு புறம் இருக்க, ஜமீன்தார் ஆட்சியில் தம்பதிகளை பிரிக்கும் வழக்கை மட்டும் விசாரிக்கவே மாட்டார்கள். தங்கள் ஜமீன் வாழ்க்கையில் ஆணையும் பெண்ணையும் பிரித்தால் அதை விட பெரிய தவறு எதுவுமே இல்லை என்று நினைத்துள்ளார்கள். எனவே வழிவழியாக இந்த தர்மத்தினை கடைபிடித்து வந்துள்ளார்கள்.
மணியாச்சி என்ற பெயருக்கு மற்றுமொரு காரணமும் கூறப் படுகிறது. அதற்கான விளக்கமும் கீழ்கண்டவாறு கூறப்படுகிறது. மதுரையில் மீனாட்சி ஆட்சி என்று கூறுவோம். அதை மீனாட்சி ஆட்சி என்று நினைத்து கொள்கிறோம். அதை வேறு மாதிரி கூறுகிறார்கள். பாண்டிய மன்னன் தனது ஆட்சிக்கு உரிய இடத்தில் அவன் கொடியின் சின்னம்.
அவர் வெற்றி ஆட்சியை தொடரும் தலைநகரம் மதுரை. மதுரையில் பாண்டிய மன்னனின் மீன் கொடி ஆட்சி நடைபெறுகிறது. அதை தான் மீனாட்சி என்று கூறுகிறார்கள். அவன் வணங்கும் தெய்வத்துக்கு மீனாட்சி என்று பெயர் என அழைக்கிறார்கள். அதுபோலவே மணியாச்சி மன்னரின் கொடியில் மணி பொறிக்கப்பட்டிருக்கும்.
மணி கொடி ஆட்சி செய்யும் இடம் மணியாச்சி என்று அழைக்கப்படுகிறது என்ற கூற்றும் நிலவுகிறது என்கிறார் ஜமீன்தாரின் வாரிசு கம்பீரம் அய்யா அவர்கள்.
தற்போது இங்கு அரண்மனை சிறியதாகத்தான் காட்சியளிக்கிறது. அதாவது இந்த இடத்தில் ஏதோ பண்ணையார் இருந்திருக்கிறார் என்பது போலவே தெரிகிறது. ஆனால் முற்காலத்தில் கோட்டை கொத்தளங்களுடன் ஜமீன் அரண்மனை மிகச்சிறப்பாக இருந்துள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் ஜமீன் தலைநகரை அமைக்க எண்ணியுள்ளார்கள்.
இதற்காக சிவலப்பேரியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் சிவலப்பேரியில் மண்கோட்டை கட்ட இயலாது எனவே தற்போது உள்ள இந்த இடத்தினை தேர்ந்தெடுத்து அதற்கு மணியாச்சி என்ற பெயரை சூட்டியுள்ளனர். அதன்பின் இங்கு மிகப்பெரிய மண்கோட்டை கட்டியுள்ளார்கள். அதன் உள்ளே பிரமாண்டமான அரண்மனையை அமைத்துள்ளார்கள். இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இங்கு பிரமாண்டமாக அரண்மனை அமைத்துள்ளார்கள். குறிப்பாக தெற்கு அரண்மனையில் ராணி வசித்துள்ளார். லெட்சுமி விலாசம் என அழைக்கப்படும் வடக்ககு அரண்மனையில் ராஜா வசித்துள்ளார். மேற்கு பக்கமாக அவரது குதிரைப் படை கட்டப்படுவதற்காக குதிரை சாவடி அமைத்துள்ளார்கள். அதன் பின் தர்பார் மண்டபம் மிக பிரமாண்டமான அமைந்துள்ளது.
இது போன்ற சிறப்பான மணியாச்சி அரண்மனையில் தற்போது சிறுபாகம் மட்டுமே உள்ளது. அதற்கு காரணம் மணியாச்சி ஜமீன்தாரின் விடுதலை போரட்டம்.
என்ன மணியாச்சி ஜமீன்தார் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டாரா?
ஆம்..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.