Wednesday, August 29, 2018

திருமலை நாயக்கருகும் சடையக்க சேதுபதிக்கும் நடந்த மறவர் நாட்டு யுத்தம்(பகுதி -1)

===============================================

(சற்று விரிவான பதிவு பொருமையாக படிக்க வேண்டுகிறேன்)

மதுரை நாயக்க மன்னரில் மிக முக்கியமானவர் திருமலை நாயக்கர் இவர் ஆட்சி காலம் 1623 முதல் 1659. இவர் காலத்தில் பல போர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கடுமையான போர் 1639 ஆம் ஆண்டு சடையக்க சேதுபதியுடன்  நடந்த மறவர் நாட்டு போர்.(1)

போருக்கான காரணம்:

========================

திருமலை நாயக்கர் கலத்தில் மறவர் நாட்டை ஆண்டு வந்த மன்னர் இரண்டாம் சடையக்க தேவர்.இவருக்கு முந்தய அரசர் கூத்தனின் சோர புத்திரன் பதவிக்கு ஆசைப்பட்டு சேதுபதியை எதிர்க்க திருமலை நாயக்கர் உதவியை நாடுகிறான்.(2)







ஆனால் திருமலை நாயக்கருக்கும் அவர் தளபதி ரமபய்யாவுக்கு போருக்கு இதைவிட முக்கிய காரணம் ஒன்று இருந்தது.அது சேதுபதியின் தன்னாட்சி அரசு. தளவாய் (எ) சடையக்கன் சேதுபதி திருமலை நாயக்கருக்கும் விஜய நகர அரசருக்கும் கட்டுப்படாமல் தன்னாட்சி செலுத்தினார். அவர்களுக்கு எந்த ஒரு திறையும் செலுத்தவில்லை.(3)

இதே நேரத்தில் தம்பியை நாயக்கர் உதவியை நாட ஒரு வடுகர் படையை நாயக்கர் தம்பியுடன் அனுப்பி வைக்கிறார். அந்தப்படையுடன் வந்த தம்பி தனக்கு பதவியை விட்டுக்கொடுத்குவிட்டு நாயக்கரிடம் சரணடையும் படி சடையக்கனிடம் முறையிடுகிறார்(4) .

மிகுந்த துனிவுடையரான சடையக்க தேவர் விட்டுக்கொடுக்கவோ சரணடையவோ தயாராக இல்லை.தம்புயுடன் வந்த வடுகர் படை வீழ்த்தப்படுகிறது. (யாரெல்லாம் கொலை செய்யப்பட்டனர் என்பதை பின் பார்க்கலாம்). சடையக்க தேவரை அடக்க அந்த படை போதுமானதாக இல்லை.

இந்த நேரத்திலும் சரனடைய மாட்டேன் என சடையக்க தேவர் அறிவிக்கிறார். சரியோ தவறோ அவரது ஆணை படி அனைவரும் நடக்க வேண்டும் என்ற மனநிலை உடையவர் திருமலை நாயக்கர்.

சேதுபதி தன்னை உடனே சந்திக்க வேண்டும் நடந்த தவறுக்கு உரிய அபராதம் கட்ட வேண்டும் என திருமலை நாயக்கர் செய்தி அனுப்புகிறார். சேதுபதியோ எதையும் மதிக்கவில்லை. அனைத்து பாளையக்காரருக்கும் செய்தி அனுப்பப்படுகிறது. சேதுபதியை உயிருடனோ பினமாகவோ பிடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு ஒரு பெரும்படை தளபதி ராமப்பையன் மற்றும் கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்ன நாயக்கர் தலைமையில் அனுப்பப்படுகிறது.(5)



ராமப்பய்யன்:

===============

திருமலை நாய்க்கரின் தலைமை படைத்தளபதி ராமப்பய்யன் ஐயர் என்ற தெலுங்கு பிராமணர். இவர் மதுரையில் இருக்கும் கூத்தியர் குண்டு என்ற ஊரில் பிறந்தவர்.(6) 

(பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தான் ராமப்பையரின் நேரடி வாரிசு என அவரே தெரிவித்துள்ளார்)

திருமலை நாயக்கர் ஆட்சி வலுவடைய இவரே காரணமானவர் என்றால் மிகையாகாது. 1625 ஆம் ஆண்டு திண்டுக்கல் வரை வந்த மைசூர் அரசரின் படையை அடக்கியது ரமப்பையரே.(7)Sath

வேணாட்டு அரசர் வீர ரவி வர்ம குலசேகர பெருமாளின் தளபதி எராவி குட்டி பிள்ளை என்பவரை வென்று அவர் தலையை வெட்டி திருமலை நாயக்கர் முன் கொண்டு வந்து வைத்து வேணாட்டை திருமலை நாயக்கருக்கு கீழ் கொண்டு வந்தவர் ராமப்பையர்.(8)

வீர சைவ பாண்டாரங்கன் வசம் இருந்த பழனி கோவிலை பிராமணர்களிடம் ஒப்படைத்தார் இவரே என்ற ஒரு செய்தியும் உண்டு( இது பற்றி கூடுதல் தகவல் தேவை).

ராமப்பையர், சிவராமையர், நரசப்பையர், வெங்கடபையர் என பல தெலுங்கு பிராமணர்கள் மதுரை நாயக்கர்களின் படைத்தலைவராய் இருந்து உள்ளதை பல்வேறு ஆவணங்கள் தெரிவிக்கிறது.

(போரை பற்றி ராமய்யன் அம்மானை என்னும் இலக்கிய நூலும் ஐரோப்பியரின் ஆவணங்களும் விவரிக்கிறது)(ரா.அ- ராமய்யன் அம்மானை)

முதலில் ராமப்பையர் திருமலை நாயக்கரிடம் சேதுபதியை வென்று வர அனுமதி கேட்ககிறார். நாயக்கர் மறுக்க ராமப்பையர் தான் வென்று வருவதாக உறுதிபட சொல்லி அனுமதி வாங்குகிறார்.


"வணங்கமல் தானிருக்கும் வண்ட மறவனையும் வளைத்து பிடித்து வந்து வணங்க வைப்பேன்"- ராமைப்பையர்(ரா.அ)

" சேது கரைதனிலே சென்றவர் மீண்டதில்லை வாளுக்கு கிரையிட மறவன் வலுக்காரன்"

"மறவனுக்கு தன்னரசு நாடு தனிக்கோட்டையாளுவனம் மதுரைப்படையென்றால் மதியான் மறவனுந்தான் மறவர்கள் சற்று மதியார் வடுகரென்றால்"- திருமலை நாயக்கர் (ரா.அ)

"பெற்றர் பிறந்தார் பெயர் போன நங்குலத்தார் உற்றருறன் முறையாருள்ள வடுகரெல்லாம் பாளையக்காரர் படைத்தலைவரெல்லோரும் வேளையதில் வென்று வரும் வீரப்பரிவாரங்களும் தொட்டியர் கம்பளத்தார் தோறத சேவகருன் சூரப்பையனை வெட்டி சூரையிட்டான் கண்டாயோ?.

ஆங்காரியஞ் சொல்லும் அருணத்திரிதவனையும் பண்டு வடுகர் படைத்தலைவரத்தனையும் சதுரேறி வெட்டிச் சதிமானஞ் செய்தவன்"-திருமலை நாயக்கர் (ரா.அ).

தம்பியுடன் வந்த வடுகர் படையில் நாயக்கர் , தொட்டியர் கம்பளத்தார் ஆகியோரும் படைத்தலைவர்களாய் சூரப்பையாவும், அருணத்திரிதவரும் இருந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் மறவர்களால் வெட்டி கொலை செய்யப்பாட்டு உள்ளனர்.

"அரக்கர் குலத்தை அனுமா ரறுத்தாப்போல் மறக்குலத்தை நானும் மாய்த்துக் கருவறுப்பேன்"-ராமைப்பையர்(ரா.அ)


அரக்கர் குலத்தை அனுமன் அழித்தது போல் மறவர் குலத்தை அழிப்பேன் என ராமப்பய்யர் சூளுரைக்கிறார்.திருமலை நாயக்கர் எச்சரித்து விடை தருகிறார்.

அரசரிடம் விடை பெற்ற ராமப்பையர், தன் தமையனிடம் விடை பெற்று பெரும்படையுடன் மதுரை வீதியில் உலா வந்த பின் வண்டியூர் கோட்டையில் கூடாரம் அடித்து முகாமிட்டார்.பின் அந்தனர்களிடம் வாழ்த்து பெற்று திருப்புவனம் தாண்டி மானாமதுரை அருகில் வந்தடைகிறார்.- (ரா.அ)

படைவந்ததை கண்ட சேதுபதி சடையக்க தேவரின் தூதுவன் அச்சத்துடன் செய்தியை சேதுபதியிடம் சென்று தெரிவிக்கிறான்.

"முன்னல் நம்மாலே முண்டு வந்த மன்னரெலாம் பரம்பக்குடி கோட்டையிலே பட்டந் தரிப்பாரோ துப்பாக்கி தன்னலே சூரையிட்டேன் கண்டாயே அறிந்திருந்தும் பார்ப்பான் அவன் படை தான் வந்ததென்றால் இதற்குப்பயந்து வந்தாயே யென்னடா தூதுவனே சூரப்பைய்யாவைத் துரத்தி சூறையிட்டேன் கண்டாயே அருனாத்திரிதவனையும் அவன் படைகளையும் குழல்வாய்க் கிரையாக கொள்ளை கொண்டதறியாயோ"

"யென்னாமல் வந்து யிறங்கு மந்த பார்ப்பான் கண்ணைப்பிடுங்கி காட்டிலே யோட்டிடாமல்"

"பின்குடுமி தன்ன பேருலகு தான்றிய தேங்காயைக்கட்டி சிதறடிக்காவிட்டால் என்பேர் சடையக்கனே எடுத்துவுமாயுதமோ"- சடையக்கன் சேதுபதி(ரா.அ)


முன்னே சொல்லப்பட்ட சூரப்பையாவ, அருணத்திரிதவர் ஆகிய திருமலை நாயக்கரின் தளபதிகளை வென்றதை சொல்கிறார் சடையக்கன். முன்பு வந்த படைகள் துப்பாக்கி மற்றும் சுழல்வாய்(பீரங்கி) ஆகியவற்றால் அழிக்கப்பட்டதையும் சொல்கிறார்.மந்த பார்பான்(ராமப்பையர்) கண்ணை பிடுங்கி காட்டில் ஓட்டிடுவேன். பின் குடுமியில் தேங்காயைகட்டி சிதரடிப்பேன் என சூளுரைக்கிறார்.


ராமநாதஸ்வாமிக்கு பூஜை செய்யும் பண்டாரம் வாள்கோட்டை ராயன் (சேதுபதி) முன்வந்து நாயக்கரிடம் சரணடைந்து விடுமாறு கூறுகிறார்.

"பார்ப்பான் தனக்கு பயந்து மெள்ள நானுமினி கப்பமுங் கட்டி கைகட்டி நிற்பேனே இளித்து மன்னவர்கள் என்னை நிந்திப்பார்கள் மண்டலத்தில் உள்ள மன்னர் நகைப்பார்கள்"- சடையக்கன் சேதுபதி(ரா.அ)


வன்னியர் (எ) வன்னியத்தேவர்:

=================================

வன்னியர் சடையக்கன் சேதுபதியின் மருமகன்.இந்தப்போரில் மறவர் படையை வழிநடத்தி சென்று ராமப்பையன் மற்றும் மொத்த பாளையக்காரர்கள் படையை எதிர்கொண்டவர் இவரே.இப்போதும் இவர் வாரிசுதாரர்கள் ராமநாதபுரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இப்போதைய வாரிசுதாரர் ரவிச்சந்திர ராமவன்னி. காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மாவட்டத்தலைவராக இருந்து வருகிறார்.



வடுகர் படையை எதிர்கொள்ள சேதுபதி தன் தளபதிகளை அழைக்கிறார்:

"என் மருக! வன்னியரே யிப்புதுமை கேட்கலையோ மதியானவர்களை வாவென்று தானழைத்து

மக்கத்திலானை யெனும் மதப்புலையை தானழைத்து சின்னாண்டி பெரியாண்டி சென்று சமர்வென்றவனே

வெண்ணிமலைக்குமரா வாரா நீ வாவென்று

சேதுக்கு வாய்த்த சேவகனே வாவென்றே

வாதுக்கொப்படி வரும் மதுரை வழிகண்டவனே

கொண்டையன் கோட்டை குறும்படிக்கு மன்னவனே

செம்பி நாட்டிலுள்ள சேர்ந்த பசை மன்னவரே

மங்கல நாட்டு வணங்காத மன்னவரும் கன்னன் கலியாணி காவலனே வாவெனவே ரவுத்தமாரே நயமுடனே வாருமேன்று

வீசுகொடை தேவா வீமனெனவானெனவே

வாது சொல்லி வெட்டி வாரும் வணங்காமுடி வேந்து மெத்தை யுடையான் யோர் வேந்தன் வேருமென்று

பாளையக்காரர் பரிவார மாத்தனையும் வாவென்று தானழைத்து வரிசை மிகக்கொடுத்தான்

மாப்பிள்ளை வன்னியரே வாவென்று கிட்டவைத்து வேங்கை புலியாரே வீரப்பரிவாரங்களே முன்னாளில் வந்த வினைமுடிய வெட்டி வென்றீரே ஆன்னளி லென்னை அரசியலை யிட்டீரே இந்நாளில் வந்த வினை யியம்புகிறேன் கேளுமினி கூத்தன் மகன் சேதுபதி வார்த்தை குறியாக இராமப்பைய னென் றொருவன் எம்பதியை நோக்கி மான மதுரையிலே வந்தே யிறங்கினனம்"-சடையக்கன் சேதுபதி(ரா.அ)

வன்னியத்தேவன், மதியாறழகன்,மருகன், வீசுகொண்டைத்தேவன், அழகன், குமாராழகன், மதத்தேவன்,ராவுத்தக்கர்த்தன்,கருத்த உடையான் ஆகிய மறவர் படைத்தலைவர்களையும் மற்ற மறவர்களையுன் அழைத்து பேசுகிறார்.







தன் மருமகன் வன்னியரை அருகே அமரவைத்து ராமப்பய்யன் என்றொருவன் படையெடுத்து வருகிறான் என விளக்குகிறார்.

(மதியாரழகத்தேவர் பின்னாளில் சிவகங்கை சிவகங்கை சீமையை உருவாக்கிய நாலுகோட்டை சசிவர்ண தேவரின் முன்னோர் ஆவார்.)


"பார்ப்பான் படை எடுத்தால் பறமென்று சொன்னீரே

வந்த வடுகரெல்லாம் மடிந்தார்களன்னளில்

இந்தவிசை வாரான் யிவன் பிழைத்தும்போவானே வாரா படையத்தனையு மடியவே போரிடுவோம்

சூறையிட்டு சுத்தித் துனிபிடுங்கி வாரோமய்யா" - சடையக்கனிடம் மறவர் படைத்தலைவர்கள் சொன்ன பதில் (ரா.அ)



"கெட்டானே பார்பான் கீழ்த்திசை நோக்கிவந்து

பஞ்சாங்கஞ் சொல்ல வேறு பாரிலிடமில்லையோ

பூசை பண்ணித்தான் பிழைக்க பிள்ளையார் தானில்லையோ

ஆசைகொண்டு வந்தானே அறியாமல் பார்ப்பானும்"

முன்வந்து தெரிபட்ட முதலிமார் சொல்லலையோ

வடுகர் பட்ட பாடெல்லாம் மறந்தார்கள் மன்னவர்கள்

பார்ப்பானு மிதுதேசம் படையெடுத்து வந்தானே

இங்கே படையெடுக்க யினிவெட்கந் தானில்லையோ

சாய்வாக வந்த தளத்தை முறியவெட்டி பார்ப்பான் குடுமியிலே பாங்குடனே தேங்காயை கட்டியடிப்பே"

மார்பிலிடும் பூணூல் பறித்து மாட்டுவடம் போட்டிடுவேன்"

"வேண்டா மறவர் விசாரமினி வேண்டாங்கன்"

- வன்னியத்தேவன் சூளுரை (ரா.அ)















பார்ப்பான் குடுமியிலே தேங்காயை கட்டியடிப்பேன், மார்பிலிடும் பூணூல் பறித்து மாட்டுவடம் போட்டிடுவேன் என வன்னியத்தேவர் சூளுரைக்கிறார்



யானைப்படை, குதிரைபடை உள்ள சேனை தாளத்துடனே யானை மேல் ஏறி வீதிவுலா வருகிறார் வன்னியர். போருக்கு செல்லும் வன்னியத்தேவர் கடுக்கமுத்தூர் கடந்து, காரடர்ந்தகுடியைத்தாண்டி ,காவனூர் வழி நடக்கையிலே மேற்கு திசையில் சூரியன் மறைந்தார்.- (ரா.அ)



"மற்றைநாள் தானும் மன்னன் புலி வன்னித்துரை மதியாற்றழகனையு மன்னன் குமாரனையும் சின்ன யாளி யுவுக்குச் சேர்ந்த படைதனையும் அரியாணிபுறக் கோட்டைக்கு அதி சீக்கிரத்தில் போகச்சொன்னர்"

"புயத்தௌ யுடையவன் போர்வேந்தன் தன்படையும் வீசுகொண்ட தேவன் வீமன் பெரும்படையும்

புதுக்குடி கோட்டைக்கு தாமுரைத்தார்

மதுரை வழிகடை மந்தத்தேவன் தன்படையும்

கருத்த உடையான் கன்னன் பெரும்படையும்

றவுத்த காத்தன் நல்ல படைக்காவாளும்

போகலூர் கோட்டைக்கு போமென்று தமுரைத்தார்

வட்டாணந் தொண்டியிலே வையிந்தன் தானியத்தை

இளையாங்குடி கோட்டை யெச்சரிக்கை யென் றுரைத்தார்"- (ரா.அ)



மறுநாள் வன்னியதேவர் மறவர் படைத்தலைவர்களை நான்கு பிரிவாக பார்க்கிறார்.

மதியாறழகனையும் குமாரனையும் அரியானிபுரக்கோட்டைக்கும்,

பொந்தையுடையானையும் வீசு கொண்டை தேவனையும் புதுக்குடிகோட்டைக்கும்,

மந்தத்தேவனையும் கறுத்தவுடையானையும் போகலூர் கோட்டைக்கும் போகச்சொல்லிவிட்டு வாட்டாணம்,தொண்டி, இளையான்குடி ஆகியவைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார்.



"மற்ற நாள் தான் தானும் மன்னன் புலி வன்னியவன் அதி சீக்கிரம் போயிறங்கி

கோட்டைபுகுந்து கொத்தளத்து மேலேறி

யெதிரி படையை யெறிட்டு தான் பார்த்து

'எங்கே யிருந்தடா யிந்த பெரும்படைதான்

கோடாங்கி வெள்ளமென கொண்டு வந்துவிட்டானே '

வீரியங்கள் பேசி வன்னி விதமுடனே ஆர்ப்பரித்து

பார்ப்பான் பெரும்படையை பாரமுறிய வெட்டவென்று

இருந்த படைத்தலைவலோரையும் அழைத்து

அஞ்சாமல் பார்ப்பான் நெஞ்செதிரே வந்தேனே

இறங்கிய பாளையத்தை இளப்ப மென்று தான் துணிந்து

கோட்டை திறந்து புறப்பட்டார் மன்னவர்கள்."- (ரா.அ)



மறுநாள் காலையில் அரியாண்டிபுரம் கோட்டைக்கு சென்று கொத்தளத்தின் மேலேறி எதிரையின் பெரும்படையை கண்டு மலைத்து போகிறார் வன்னியதேவர்.

ஆனால் அவ்வுணர்ச்சி நெடிப்பொழுதில் மறைந்து நெஞ்சு வீரத்தால் விம்மியது. வீரியங்கள் பேசி ஆர்பரித்து கோட்டை கதவு திறந்து பார்ப்பானின் வடுகர் படையின் மேல் பாய்ந்தார்கள் மறவர்கள்.



முதல் நாள் போர்..... தொடரும்....



அடிக்குறிப்புகள்:

===============

1,2,3,7-History of the Nayaks of Madura - R.Sathyanatha Aiyar
3-நிலக்கோட்டை கூளப்ப நாயக்கர் வம்ச வரலாறு - பேரா. எஸ். ஆர். விவேகானந்தம்
4,5- The Madura Country: A Manual-James Henry Nelson
5 - Mackenzie Manuscripts
6-Namma Madurai: From Vedas to military strategies - The Hindu 2-may- 2012

https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/namma-madurai-from-vedas-to-military-strategies/article3376882.ece

8-An unsung hero-The Hindu 20-july2012)

https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/an-unsung-hero/article3659943.ece

நன்றி:
கட்டுரை வழங்கியவர்,
கார்த்திக் தேவர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.