
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த சிலர், ‘தும்புகள் (நளவர்), துரும்புகள் (ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு சலவை செய்பவர்கள்) தம்பட்டக் கம்புகள் (பறையர்) சமூக சேவை செய்ய வந்து விட்டனர்’ என்று இப்போராட்டத்தைக் கிண்டல் செய்துள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அப்போர் முழக்கம் தென்புலத்திலும் ஒலித்து விழிப்பை ஏற்படுத்தியது. அது மாத்திரமல்ல ‘‘யாழ்ப்பாணத்தில் வியட்நாம் யுத்தம் நடக்கிறது’’ என்று ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் முறையிட்டு குரலெழுப்பினார். இப்போராட்டம் சுபத்திரன், சாருமதி, நெடுந்தீவு மகேந்திரன், கணேஷ் போன்ற போராட்ட உணர்வு நிறைந்த வீரியமுள்ள இளம் முற்போக்குக் கவிஞர்களைத் தோற்றுவித்தது’’.
யாழ்ப்பாண அரசர் காலத்திலும், பின்னர் ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சிக் காலத்திலும்கூட வெவ்வேறு சாதிகளுக்கான வேறுபட்ட உரிமைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. இவை வாழிடம், ஆடை அணிகள், தலை அலங்காரம், மண நிகழ்வு, மரண நிகழ்வு போன்ற பலவற்றையும் தழுவி அமைந்திருந்தன.
வாழிடம் தொடர்பில், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய நல்லூர் நகர் பற்றி ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்:
- நல்லூர் நகரத்திலே ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வீதியிருந்ததென்பது தெரிகின்றது. அந்தணர்க்குகொரு தெருவும், செட்டிகளுக்கொரு தெருவும், வேளாளர்க்கொரு தெருவும், கன்னாருக்கொரு தெருவும், தட்டாருக்கொரு தெருவும், கைக்கோளர்க்கொரு தெருவும், சாயக்காரருக்கொரு தெருவும், உப்புவாணிகருக்கொரு தெருவும்,பள்ளருக்கொரு தெருவும் , சிவிகையார்க்கொரு தெருவுமாக இப்படி அறுபத்துநான்கு தெருக்களிருந்தன. இந்நகரத்தினுள்ளே ........ அம்பட்டர், வண்ணார், நளவர், பறையர், துரும்பர் முதலியோர்க்கு இருக்கையில்லை. அவரெல்லாம் புறஞ்சேரிகளிலேயே வசித்தார்கள்.
மணவீடு, மரணவீடு போன்றவற்றில் வெவ்வேறு சாதிகள் பயன்படுத்த உரிமையுள்ள இசைக்கருவிகள் பற்றியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன
யாழ்ப்பாணத்துச் சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருந்ததால், அவற்றுக்கிடையேயான பொருளாதாரத் தொடர்புகள் முதன்மையானவை. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்துச் சாதிகளை நான்கு பிரிவுகளாக வகுக்கமுடியும் என கென்னத் டேவிட் என்பவரை மேற்கோள் காட்டி சிவத்தம்பி எழுதியுள்ளார். அப்பிரிவுகள் பின்வருமாறு:
கட்டுள்ள சாதிகள் (bound castes)
பிராமணர், வெள்ளாளர், கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் முதலானோர்.
கட்டற்ற சாதிகள் (unbound castes)
செட்டிகள், தட்டார், கைக்குளர், சேணியர், முக்கியர், திமிலர் முதலானோர்.
பிரதானமாகக் கட்டுள்ள கலப்பு நிலையிலுள்ள சாதிகள்
பண்டாரம், நட்டுவர்
பிரதானமாகக் கட்டற்ற கலப்பு நிலையிலுள்ள சாதிகள்
கரையார், கொல்லர், தச்சர், குயவர்
கட்டுள்ள சாதிகளைச் சேர்ந்த குடும்பங்கள், நில உடைமையாளரான வெள்ளாளரின் கீழ் அவர்களுக்குச் சேவகம் செய்து வாழுகின்ற ஒரு நிலை இருந்தது. இது குடிமை முறை என அழைக்கப்பட்டது. இம் முறையின் கீழ் பணம் படைத்த வெள்ளாளர் குடும்பங்கள், தங்களுக்குக் கீழ் கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் போன்ற சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களைத் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்து வேலை செய்வித்தனர். இக் குடும்பங்கள் குறித்த வெள்ளாளக் குடும்பங்களின் சிறைகுடிகள் எனப்பட்டன
யாழ்ப்பாணத்தில் இந்த சாதிக் கட்டமைப்பு அங்கு வாழ்ந்த சைவ – வேளாள மேட்டுக்குடியினரால் போசித்து வளர்க்கப்பட்டது என்றாலும், இலங்கையைக் கைப்பற்றி சுமார் 400 வருடங்கள் வரை அரசாண்ட போரத்துக்கீச, ஒல்லாந்த, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களும் அந்த அமைப்பைத் தகர்க்க விரும்பாமல் அதைப் பேணியபடியே ஆட்சியை நடத்தியிருக்கின்றனர். அதற்கு உதாரணம், அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிகள் பற்றி வெளியிட்டுள்ள ஆவணங்களாகும். அதன்படி –1927இல் பிரித்தானியர் எடுத்த ஒரு கணிப்பீட்டில் பின்வரும் சாதிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
1. முக்குவர் 18. பண்டாரம்2. வேளாளர் 19. பண்டாரப்பிள்ளை3. கரையார் 20. வேடவேளாளர்4. சீர்பாதர் 21. குயவர்5. கோவிலார் 22. நளவர்6. முதலிகள் (செங்குந்தர்) 23. வண்ணார்7. செட்டிகள் 24. அந்தணர்8. பள்ளர் 25. சாண்டார்9. பறையர் 26. வன்னியர்10. திமிலர் 27. ஆண்டிகள்11. கோவியர் 28. சிற்பிகள்12. தெட்டி 29. தச்சர்13. மீன்தூக்கி 30. தவசிகள்14. சாயக்காரர் 31. கொல்லர்15. தட்டார் 32. அம்பட்டர்16. தனக்காரர் 33. சாணர்17. வாணிபர்
பிரித்தானியருக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த தொமஸ் வன்றீ என்ற ஒல்லாந்து தளபதி 1697இல் எழுதிய அறிக்கையொன்றிலும் பெரும்பாலும் இதே சாதிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் குறிப்பிடாத பின்வரும் சாதிகளும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். அவர்கள் விபரம் வருமாறு:
சாலியர் துரும்பர்வடுகர் ஓடாவியார்சக்கிலியர் மடப்பள்ளி வேளாளர்வீர சைவர் அகம்படியார்சிவியார் கைக்குளர்இசை வேளாளர் எண்ணெய்க்காரர்சேணியர் வலைஞர்
இந்தச் சாதிகளில் சில காலப்போக்கில் ஒன்றாகக் கலந்துவிட்டதாகவும், அதனால் சில சாதிகள் தற்பொழுது வழக்கில் இல்லையென்றும் கூறப்படுகிறது. இந்தச் சாதிகளில் ஆகக் கீழ்நிலையிலுள்ள ஐந்து சாதியினரே “பஞ்சமர்” என அழைக்கப்படுகின்றனர்.
அந்தப் பஞ்சமர்கள் பின்வரும் விதங்களில் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஒடுக்குமுறைக்குள்ளாகி இருக்கின்றனர். அவையாவன:• பெண்களோ ஆண்களோ மேலங்கி அணியக்கூடாது, அப்படிப் போட்டவர்களின் சட்டைகள் கொக்கைச் சத்தகத்தால் இழுத்து கிழிக்கப்பட்டுள்ளது.• முழங்காலுக்கு கீழே உடை உடுத்தக்கூடாது• தோளில் துண்டு (சால்வை போன்றவை) போடக்கூடாது.• பெண்கள் தாவணி போடக்கூடாது•
வீதிகளிலும் பொது இடங்களிலும் நடமாடக்கூடாது. அவசியம் கருதி ஒரு வீதியால் போகவேண்டி இருந்தால், ஒரு பனம் காவோலையை இழுத்துச் சென்று தனது வருகையை அறிவிப்பதுடன், தனது காலடியை அழிக்கவும் வேண்டும். அவ்வேளையில் உயர்சாதிக்காரர் யாரேனும் அவ்வழியால் வந்தால் அவரைப் பார்க்காது வேலிப்பக்கம் திரும்பி நிற்க வேண்டும்.• தாம் வாழ்வதற்கு குடிசைகள் அமைக்கும்போது உயர்சாதியினர் குறிப்பிடும் முறையில் மட்மே அமைக்க வேண்டும்.•
நகைகள் அணியக்கூடாது• திருமணத்தில் தாலி கட்டக்கூடாது• சடங்குகளின் போது வெள்ளை கட்டக்கூடாது• உயர்சாதியினரின் பெயர்களை வைக்கக்கூடாது• பிரேதங்களை எரிக்காது புதைக்க வேண்டும், உயர்சாதியினரின் சுடலைகளைப் பயன்படுத்தக்கூடாது•
உயர் சாதியினரின் கிணறுகளில் தண்ணீர் அள்ளவோ, குளங்களைப் பயன்படுத்தவோ கூடாது• வைபவங்களில் வாத்தியங்கள் பயன்படுத்தக்கூடாது• குடை பிடிக்கக்கூடாது• பாதணிகள் அணியக்கூடாது• கல்வி கற்கக்கூடாது•
உயர் சாதியினர் வணங்கும் கோயில்களுக்குள் போகக்கூடாது, அவர்கள் வணங்கும் தெய்வங்களை வணங்கக்கூடாது, தாழ்த்தப்பட்ட சாதி ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்பட்ட தெய்வங்களையே வணங்க வேண்டும், தாம் வணங்கும் தெய்வங்களுக்கும் தேங்காய் அடிக்கக்கூடாது• தேநீர்க்கடைகளுக்குள் செல்லக்கூடாது• வாகனங்களில் ஆசனங்களில் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது•
பிற்காலத்தில் சில பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் படிக்க அனுமதிக்கப்பட்ட போதும், அவர்கள் மற்றைய பிள்ளைகளுடன் ஆசனங்களில் அமராது நிலத்தில் இருந்துதான் படிக்க வேண்டும்.இப்படி இன்னும் எத்தனையெத்தனையோ கட்டுப்பாடுகள்.
இவையெல்லாவற்றையும் கடந்துதான் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றைய நிலையை ஓரளவு அடைந்திருக்கின்றனர். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கூட இந்த ஒடுக்குமுறைகளில் சில மறைமுகமாக அமுல்படுத்தப்படுகின்றன.நிலைமை இப்படியிருக்கையில் நமது தமிழினம் உருப்படுமா? நமக்கு ‘விடுதலை’ கிடைக்குமா?
ஈழத்து தமிழர் சமூகவமைப்பில் சாதியமைப்பு என்பது சிக்கல் இருந்தது. நூலாசிரியர்கள் இதனை தமக்கே உரிய முறையில் ஆராய்ந்துள்ளனர். சாதியமைப்பு அடிப்படையை வரலாற்று கண்ணோட்டத்தில் நோக்கி அதனை வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் தெளிவுப்படுத்துகின்றனர் எனக் கூறின் தவறாகாது. இத்தகைய அனுபவங்களையும் நடைமுறையும் இந்நூல் வெளிக் கொணர்கின்றது என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. இன்று வரை தமிழர் சமூகவமைப்பில் முனைப்படைந்து வருகின்ற சாதிய முரண்பாடுகள் குறித்த போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அது தொடர்பான ஆய்வுகள் வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. ஆழமான நுட்பமான மாக்ஸிய ஆய்வுகளின் ஊடாகவே இதனை சாதிக்க முடியும். மிகைப்படுத்தல்களோ திரிபுகளோ மறைப்புகளோ இன்றி இந்நூலாசிரியர்கள் இந்நூலை எழுதியுள்ளமை ஒரு பொறுப்புள்ள சமூக கடமையின் பகுதியேயாகும்.
Thanks:
- லெனின் மதிவானம்
- பிரிவு: கட்டுரைகள்
சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும் என்ற நூலின் முதற்பதிப்பு 1989 ஆம் ஆண்டு புதிய பூமி வெளியீடாக வந்தது. இந்நூலின் ஆசிரியர்களான வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இராவீந்திரன்)
















No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.