Tuesday, June 4, 2013

முக்குலத்தோரின் குல தெய்வங்கள்

முக்குலத்தோரின் குல தெய்வங்களில் ஒன்று :


அந்தச் சிலையின் தலை உடைக்கப்பட்டு, அந்த சிலையின் காலடியிலேயே கிடக்கிறது. கைகள் இரண்டும் துண்டு துண்டாக சிதைக்கப்பட்டு, அதுவும் கீழே பரிதாபமாக விழுந்து கிடக்கின்றன. மார்பு பகுதியோ அனாதை மாதிரி அருகில் உடைந்து புதைந்திருக்கிறது.




ஆனால் அந்தச் சிலை மட்டும் தலையில்லா முண்டமாக, இடுப்பு வரைக்குமாக இரண்டு கால்களுடன் நின்று கொண்டிருக்கிறது. உடைந்து கிடக்கும் தலை, மார்பு, கை, கால் என்று எல்லாவற்றிற்கும் சந்தனம், குங்குமம், மாலை இட்டு, ஆடு, கோழி பலியிட்டு பயபக்தியுடன் விழுந்து விழுந்து வணங்குகிறார்கள் பக்தர்கள்.

கோயில் சிலைகளில் சாதாரண-மாக சிறு விரிசல் ஏற்பட்டால்கூட பின்னமாகி விட்டது என்று, இதுநாள் வரை வழிபடப்பட்ட சிலை, மூன்றாவது பிராகாரத்தின் மூலைக்குத் தள்ளப்படும் ஆகம விதிகளைப் புறந்தள்ளி, ஒரு சிலையின், தூள்தூளாக்கப்-பட்ட எல்லாப் பகுதிகளும் தனித்தனியாக வழிப்படப்படும் இடம் எங்கே என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

அப்படியானால், உடனே நீங்கள் மதுரைக்குச் செல்லுங்கள். பஸ் ஸ்டாண்டிலோ, தமுக்கம் மைதானத்-திலோ வெள்ளந்தியாக நின்று கொண்டிருக்கும் அந்தத் தெற்கத்தி மக்களின் கூட்டத்தை நோக்கிப் ‘‘பாண்டீய்’’ என்று உரத்த குரல் எழுப்புங்கள். நூற்றுக்கு முப்பது பாண்டிகள் திரும்பிப் பார்ப்பார்கள்!

அவர்களில் ஒருவரிடம், பாண்டி என்று அவருக்கு ஏன் பெயர் வைத்தார்கள்? என்று கேளுங்கள். அல்லது அவர்களின் குல-தெய்வத்தின் பெயரைக் கேளுங்கள்.

‘‘பாண்டி முனீஸ்வரர்’’ என்று பெருமையாக பதில் சொல்வார்கள். அந்தப் பாண்டி கோயிலில்தான், தூள்தூளாக உடைக்கப்-பட்ட சமயக் கருப்பனை நீங்கள் காணமுடியும். இவருக்கு பக்தர்கள் விரும்பிப் படைப்பது என்னென்ன தெரியுமா? ஆச்சரியப்படாதீர்கள் சாராயம், பிராந்தி, சுருட்டு! சமயத்தில் கஞ்சா!


பாண்டி கோவிலருகே நீங்கள் சென்றதுமே ஒரு கிராமத்து வாசனையை உணர்வீர்கள். மரமும் மரம் சார்ந்த மணலும் கலந்த சூழல்.

கரிய பெரிய உருவம், சடாமுடி, ஆங்காரமான விழிகள், முறுக்கிவிடப்-பட்ட மீசை என்று உக்கிரமாக, படு‘துடி’யாக ஆனால், சம்மணமிட்ட தவக்கோலத்தில் காட்சி தரும் பாண்டி முனீஸ்வரரை பார்த்தால் முதலில் பயம் வரும். பின்னர் பக்தி வரும். பயபக்தி! முக்குலத்தோரின் முழுமுதற் தெய்வமான இந்தப் பாண்டி முனீஸ்வரர் யார் தெரியுமா?

சிலப்பதிகாரத்தை நீங்கள் எட்டாம் வகுப்பிலேயே படித்திருப்-பீர்கள். கண்ணகி _ கோவலன் _ காற்சிலம்பு _ பாண்டிய மன்னன் _ நீதி _ உயிர்நீத்தல். ஆமாம். அதேதான். நீதிநெறி தவறாமல் ஆண்டு வந்து ஒரே ஒரு முறை அறியாது பிழை செய்திருப்பினும், ‘யானே கள்வன்’ என்று மானஸ்தனாய் உயிர்நீத்தானே மதுரை பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், அவன்தான் இங்கே பாண்டி முனீஸ்வரராக அருளாட்சி புரிகிறார்.

அப்போது ஏன் தவக்கோலம் என்று கேட்கிறீர்களா?

இதோ 200 வருஷத்திற்கு முன்பு நடந்த அந்தக் கதை.

கரூர் பக்கத்திலிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக மதுரைக்கு வந்தது ஒரு கூட்டம். இப்போது கோயிலிருக்கும் இடத்தின் அருகில் அவர்கள் கூடாரமிட்டுத் தங்கினார்கள்.

அதிலே வள்ளியம்மாள், பெரியசாமி என்கிற ஒரு முதிய தம்பதியினரும் இருந்தார்கள். கொடுத்து வைத்த ஜோடி!

அன்றிரவு, வள்ளியம்மாளின் கனவிலே வந்தார் ஒரு முனிவர்.

‘‘அம்மா, நீங்கள் கூடாரம் இட்டுத் தங்கியிருக்குமிடம் எது தெரியுமா? ஒரு காலத்தில் என்னுடைய அரண்மனை இருந்த இடம் இது. நான் யார் என்று புரிகிறதா? பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நான்தான். கண்ணகிக்குத் தவறான நீதி வழங்கியதால் உயிர் நீத்த நான், மறுபிறவியிலும் மானிடனாகப் பிறந்தேன். கண்ணகிக்கு நான் செய்த பிழைக்குப் பிராயச்சித்தம் பண்ண, சடாமுடியுடன் சதா நேரமும் சதாசிவனைக் குறித்து தவமிருந்தேன். என் தவத்திற்கு மெச்சிய சிவ-பெருமான், என்னைத் தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார்.

எனவே, நான் இருந்த தவக்கோலத்தி-லேயே என் உடல் சிலையாக மாறி மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு-

விட்டது. நான் மீண்டும் வெளிவரும் நேரம் வந்துவிட்டது. ஈஸ்வரனால் ஆட்-கொள்ளப்பட்ட முனிவரானதால் நானும் ஈஸ்வரனாக, முனீஸ்வரனாக அருள்பாலிக்கப் போகிறேன்.

இங்கே நீ உறங்கும் இடத்திற்கு அருகில்தான் எட்டடி ஆழத்தில் நான் பூமிக்குள் புதையுண்டிருக்-கிறேன். என்னை வெளியில் எடுத்து வழிபட்டால் உன்னையும், உன் கூட்டத்தாரையும் நான் பரம்பரை பரம்பரையாக வாழ வைப்பேன்’’ என்றார், முனீஸ்வரர்.

விதிர்விதிர்த்து எழுந்தாள் வள்ளியம்மாள்.

தன் கூட்டத்தாரிடமும் ஊராரிடமும், தான் கண்ட கனவைச் சொன்னாள்.

அவள் கூறிய இடத்தில் பூமி தோண்டப்பட்டது. அங்கே ஆழத்தில்... ஆழத்தில்... பாண்டி முனீஸ்வரர்!

அப்புறம் என்ன? சின்னதாய்க் குடிசையில் எழுந்தருளிய பாண்டி, இன்று பெரிய கோயிலில் அருளாட்சி புரிகிறார். இவரை அடையாளம் காட்டிய வள்ளியம்மை-யின் வாரிசுகளே இன்றும் பூசாரியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மதுரையைச் சுற்றியுள்ள மேல-மடை, மானகிரி, உத்தங்குடி, வண்டி-யூர், கருப்பாயூரணி கிராமங்களுக்குக் காவல் தெய்வம் பாண்டிதான். அது மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்களுக்கும் குல தெய்வமாக அருள் பாலிக்கிறார் பாண்டி முனீஸ்வரர்.

குழந்தைப்பேறு இல்லாதவர்-களுக்கு பாண்டி கைகண்ட தெய்வம் என்கிறார்கள் பக்தர்கள். பிள்ளை வரத்திற்காகக் கட்டப்பட்ட தொட்டில்களே இதற்குச் சாட்சி சொல்கின்றன. ‘காதணி கோயில்’ என்றும் இதனை அழைக்கிறார்கள். குழந்தை பிறந்ததும் காது குத்தி, முதல் மொட்டையும் இங்கேதான்.

பாண்டி முனீஸ்வரரை வணங்கி-விட்டு வெளியில் வந்தால், சங்கிலி கருப்பன் பயமுறுத்தும்படி காட்சி-யளிக்கிறார். (கருப்பனின் கதையைச் சென்றவாரம் பார்த்திருப்பீர்கள்) அவர் காலடியில் சில சுருட்டுகள். இங்கே

பூசாரி, ஒரு பெண்மணி! அட!

அடுத்ததாக பொங்கலிடும் இடமும், ஆடு, சேவல்கள் பலியிடும் இடமும் காணப்படுகின்றன. ஆங்காங்கே புனிதமான ரத்தக் கறைகள்.

பிராகாரங்கள், சுற்றுச்சுவர்கள், தாழ்வாரங்கள், எதையும் எதிர்பார்க்கா-மல் மரங்கள் அடர்ந்திருக்க, மண் தரையில் நடந்தால் கொஞ்சம் தொலைவில் ஆண்டிச்சாமி சன்னதி வருகிறது.

இங்கு உருவம் எதுவும் கிடையாது. ஒரு மேடை. அவ்வளவுதான். யார் இந்த ஆண்டி? நம் பழனியாண்டிதான்! அரூபமான சிவனின் வழிபாட்டை, அவரது மகனிடமே நடத்துவது எத்தனை பெரிய விஷயம்!

இன்னும் சற்று மண் தரையில் நடந்தால், சமயக் கருப்பரின் சன்னதி. துண்டு துண்டாய் உடைக்கப்பட்ட சமயக் கருப்பர். யார் இவர்? பாண்டி முனீஸ்வரரின் காவல்காரர் இவர்தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்தப் பகுதியில் வேட்டைக்கு வந்த ஒரு துரை, சமயக் கருப்பரின் வீரதீரத்தைக் கண்டு பொறாமைப்-பட்டு, அவரைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டு-விட்டதாகச் சொல்கிறார்கள்.

‘‘வேறு சிலை செய்ய வேண்டாம் என்றும், உடைந்த பாகங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டாம் என்றும், இப்படியே இருக்கட்டும் என்றும் சமயக்கருப்பர் உத்தரவிட்ட-தால் அப்படியே வைத்துவிட்டார்-கள்’’ என்கிறார் கோயில் பூசாரி.

காவல்காரர் என்பதால் சமயக் கருப்பருக்கு கிடா, சேவல் பலி, சாராயம், சுருட்டு சமயத்தில் கஞ்சா கூட இவருக்குப் படைக்கிறார்கள்.

ஆனால் பாண்டி முனீஸ்வரருக்கு சைவம்தான்!

ஏன்? அவர்தான் ஈஸ்வரனின் அம்சமாயிற்றே!

பாண்டி முனீஸ்வரர் சன்னதியில் பெரிய அளவில் பூஜைகள் எல்லாம் கிடையாது. சாமியை நீங்கள் நன்றாகப் பார்த்து முடிந்ததும் பூசாரி, நெற்றி நிறைய விபூதியைப் பூசி விடுகிறார்.

அப்போது கிடைக்கும் மன நிம்மதி இருக்கிறதே... அது எப்படி இருக்கும் என்றால் _ ஏப்பு, நேர்ல போய் கும்புட்டு வந்து சொல்லுப்பூ!.
 
 
முக்குலத்தோரின் குல தெய்வ்களில் இரண்டு :



 
இதோ சபரிமலை சீஸன் ஆரம்பமாகப் போகிறது. ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்ற சரண கோஷம் உங்கள் காதுகளில் எல்லாம் ஒலிக்கப் போகிறது. அந்தக் கல், முள் ஆனந்த அனுபவம் சபரிமலை போனால்தான் கிடைக்கும் என்பதில்லை. நம் தமிழகத்திலேயே தூத்துக்குடி அருகில் உள்ள ஆரைக்குளம் மலையாண்டி சாஸ்தா கோயிலுக்குச் சென்றாலும் கிடைக்கும்.



பக்தர்கள் பலருக்கும் ஓர் ஐயம் இருக்கும். சபரிமலையில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பன், நம் ஊரில் மட்டும் திருமணம் ஆனவராக, அதுவும் இரண்டு மனைவிகளுடன் காட்சி தருவது ஏன் என்ற சந்தேகம்! அது தவிர ஐயப்பனுக்கு ஒரு மகனும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?


அந்த சந்தேகங்கள் தௌ£வதற்கு முன்பாக, மலையாண்டி சாஸ்தாவை தரிசனம் செய்து விட்டு வரலாமா?


தூத்துக்குடியிலிருந்து கோவில் பட்டி செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆரைக்குளம் கிராமத்தில், செம்மண் மலையின் மீது அமைந்திருக்கிறது மலையாண்டி சாஸ்தா கோயில். தொலைவிலிருந்து பார்த்தாலே மலையும், கோயிலும் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறது. அய்யனை மனதில் துதித்துக் கொண்டே, இரண்டு கி.மீ. நடக்க வேண்டும். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!


இதோ மலை மீது மூச்சு வாங்க ஏறி வந்து விட் டோம்!


காவி பூசப்பட்டு கம்பீரமான மதிற்சுவர்களுடன் காட்சியளிக்கும் கோயிலின் முன்னால் ஒரு சிறிய மேடை யில் இரண்டு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.


வித்தியாசமாகக் காணப்படும் அதற்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?


அருகிலிருக்கும் உள்ளூர்க்காரர்கள் கந்தசாமி, முத்துராமலிங்கம் ஆகியோரிடம் கேட்டபோது, அது ஒரு காதல் கல்வெட்டு என்பது புரிந்தது. காதல் தாஜ்மஹால்!


இதோ அந்தக் கதை!


மணிக்கட்டித் தேவர் என்பவர் இந்த ஊர்க்காரர். அவருக்கு முத்தம்மா என்ற பெண் ணின் மீது காதல்.



முத்தம்மா வேறு ஜாதியைச் சார்ந்தவள். அண்ணன், தம்பி ஆறு பேருடன் பிறந்தவள்.


காதலை ஜாதி தடுத்தது. தடுக்கத் தடுக்கத் தானே காதல் வளரும்!


எல்லாக் காதலர்களுக்கும் வரும் அதே ஐடியா, அவர்களுக்கும் தோன்றிற்று. ஆம். ஊரை விட்டு ஓடி விடலாமா?


சுப யோக... இல்லை. சுபமும் யோகமும் இல்லாத நேரத்தில் காதலர்கள் ஊரை விட்டு ஓடினார்கள். அவர்கள் ஓடி ஒளாந்த இடம் மலையாண்டி சாஸ்தா கோயில் இருக்கும் மலைப் பகுதி. அப்போது இந்த மலை அடர்ந்த காடாக இருந்தது. ஒளாந்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வனம்.


முத்தம்மாவின் சகோத ரர்கள் கடும் ஆத்திரத்துடன் மணமக்களைத் தேடினார்கள். அவர்களின் கோபம் கொலைவெறியாக மாறியிருந்தது.


தெய்வீகக் காதலர்களாக இருந்தாலும், சோறு சாப்பிட்டாக வேண்டுமே? காட்டில் கிடைத்த காய்களை வைத்து முத்தம்மா ஏதோ உணவு தயாரிக்க, அதனால் எழுந்த புகை, ஊருக்குள் இருப்பவர்களிடம் இவர்களை காட்டிக் கொடுத்தது. புகை.....பகை!


காதல் எதிரிகள் கைகளில் ஆயுதங்களுடன் மலைக்காட்டுக்குள் புகுந்தார்கள்.


காதலர்களைத் தேடிப்பிடித்து, வெட்டிச் சாய்த்து... முத்தம்மா சமைத்த அரிசியே,வாய்க்கரிசியாக மாறிப் போனது.


காதலர்கள் மறைந்தாலும், அவர்களின் நினைவாக அந்த ஸ்தூபிகள் மட்டும் யாருடைய தொந்தரவும் இல்லாமல் ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது.


இதோ இப்போது கோயிலுக்குள் நுழை வோமா?


நுழைவதற்கு முன்னால் முக்கியமான ஒரு விஷயம். நீங்கள் இந்தக் கோயிலுக்கு வருவதாக இருந்தால், சும்மா மலையேறி வந்து விடாதீர்கள். கோயில் பூட்டித்தான் இருக்கும். அதனால் ஆரைக்குளம் கிராமத்திலேயே தபால்காரர் வீட்டில் சாவி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் யாரையாவது கூட அனுப்புவார்கள். இதை மறந்து விடாதீர்கள். மறந்தால் 2 கி.மீ. மீண்டும் நடக்க வேண்டும். ஜாக்கிரதை.


கருவறையில் தேவிகள் பூரணா, புஷ்கலாவுடன் யானை வாகனத்தில் அமர்ந்தபடி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் மலையாண்டி சாஸ்தா. முக்குலத்தோருக்கான பரம்பரை தெய்வம் இவர்தான். 80 கிராம மக்களை மலையில் இருந்தபடியே மகிழ்ச்சி பொங்க வைப்பதாலோ என்னவோ தானும் மகிழ்ச்சியாக, புன்னகை தவழக் காட்சியளிக்கிறார் ஐயன்.


“பங்குனி உத்திரத்தன்னிக்குப் பாக்கணும் கூட்டத்தை. 80 கிராமத்து முக்குலத்தோரும் திருவிழா மாதிரி வந்து கூடுவாங்க. இந்த மலையே அன்னிக்குப் பக்தர்களாலே நிரம்பியிருக்கும். உலகத்துல எந்த ஊர்ல இருந்தாலும் கிராமத்து மக்கள் எல்லாரும் அன்னிக்கு இங்கே வந்து சேர்ந்திடுவோம்’’ பரவசத்துடன் கூறும் சினிமா டைரக்டர் டி.பி. கஜேந்திரன், ”மலையாண்டி சாஸ்தா கோயிலுக்கு பக்தர்கள் வரதுக்கு வசதியா சாலை வசதியும், குடிதண்ணீர் வசதியும் அரசாங்கம் செய்து கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும். இந்த இடம் வனத்துறையின் ¢கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசு கொஞ்சம் மனது வைக்கவேண்டும்“ என்கிறார்.


கருப்பசாமி, பேச்சியம்மை, இருளப்பர், காக்காச்சி, ராக்காச்சி ஆகியோரும் இந்த மலைக்கோயிலில் அருள்பாலிக்கிறார்கள்.


சாஸ்தா சன்னதிக்குப் பின்னால் இருக்கும் இரண்டு மரங்களை மட்டும் பார்க்காமல் வந்துவிடாதீர்கள். முடிந்தால் அதன் இலைகளில் இரண்டையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். அந்த இலைகளைத் தின்றால் தீராத நோய்களெல்லாம் தீருமென்பது நம்பிக்கை.


அதற்கும் ஒரு கதை இருக்கிறது. பல வருடங் களுக்கு முன்பு, இருளப்பசாமிக்குப் பொங்கல் வைக்க ஒரு குடும்பம் இங்கே வந்திருந்தது. அப்போது கடும் மழை. சாமி கும்பிட்டுவிட்டு, வீடு திரும்பும்போது,, பொங்கல் கிண்டிய அகப்பையையும் துடுப்பையும் இங்கேயே நட்டுவைத்துவிட்டுச் சென்றார்கள். மறுநாள் இருளப்பசாமியின் அருளால், அவையிரண்டும் துளிர் விட்டு மரமாக மாறியிருந்தன. அன்று முதல், இந்த மரத்தையும் மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள்.


சரி, சபரிமலையில் திரு மணம் ஆகாதவராக இருக்கும் ஐயப்பனுக்குத் தமிழகத்தில் மட்டும் இரண்டு மனைவிகள் வந்த கதையை இப்போது பார்க்கலாமா?


கயிலாயம் :


முதல்முதலில் ஐயப்பன் இருந்தது கயிலாயத்தில்தான். விநாயகர், முருகன் ஆகியோரோடு அவரும் ஒருவராக இருந்து வந்தார். அவர் எப்படி சபரிமலை வந்தார்? முதலில் கயிலாயத்திற்குப் பக்கத்திலுள்ள நேபாளத்திற்குப் போகலாமா?


நேபாளம் :


நேபாளத்தை அப்போது பளிஞன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கை தேர்ந்த மந்திரவாதியும் கூட. ஆனாலும் நல்லெண்ணம் படைத்தவன்.


அவனது ஒரே ஆசை 1000 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதுதான். அதற்கு என்ன செய்வது?


கன்னிப் பெண் ஒருத்தி யைக் காளிக்குப் பலி கொடுத் தால் எண்ணம் நிறைவேறும் என்றது அவனது மந்தி(ர) புத்தி.


குறிப்பிட்ட தகுதி களுடன் ஒரு பெண் தேர்ந் தெடுக்கப்பட்டாள்.


நரபலிக்கு நாள் குறிக்கப்பட்டது.


எல்லாம் பார்த்த மன்னன் ஒன்றை மட்டும் மறந்துவி¢ட்டான். அந்தப் பெண் தீவிரமான சிவ பக்தை என்பதை.


1000 ஆண்டுகள் வாழ மன்னன் அவளைப் பலியிடத் துடிக்க, அவளோ தன் உயிர் பிழைக்க சிவனைக் கும்பிட்டாள்.


பார்த்தார் சிவன். ஐயப்பனை அழைத்தார். பக்தையைக் காப்பாற்றுமாறு அனுப்பிவைத்தார்.


விரைந்தார் ஐயப்பன். அவரைப் பார்த்ததுமே ஆடிப்போய்விட்டான் மன்னன்.


அப்புறம்? பக்தை காப்பாற்றப்பட்டாள்.


மனம் மாறிய மன்னன், தன் மகளையே ஐயப்பனுக்கு மணம் முடித்து வைத்தான். மகளின் பெயர் புஷ்கலா!(ஐயப்பனுக்கும், புஷ்கலாவுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் சத்யகன்!)


கொச்சி :


அந்தக் காலத்தில் கொச்சியை ஆண்ட ராஜா, பஞ்சகன். அவன் சிறந்த ஐயப்ப பக்தன். வேட்டைப் பிரியனும் கூட.


ஒரு நாள் ராஜா வேட்டைக்குக் கிளம்பினான். வழி தவறி, நடுக்காட்டைத் தாண்டி, பூதங்கள் வாழும் பயங்கரமான பகுதிக்குச் சென்றுவிட்டான்.


பூதங்கள் அவனைச் சூழ்ந்து கொண்டன. அலறினான் மன்னன். தப்பிக்க வழியே இல்லை.


ஐயப்பன்தான் ஒரே கதி என்பது புரிந்து, “ஐயப்பா” என்று கதறினான் ராஜா.


அதேதான். சாஸ்தா, புலியின் மீது பறந்து வந்தார். ராஜாவைக் காப்பாற்றி னார். அப்புறம்? அந்த ராஜாவுக்கும் ஒரு மகள் உண்டு. பூரணா!


டும் டும் டும்!


பூரணாவை சாஸ்தா மணந்ததைக் கண்டு உள்ளம் கொதித்தான் ஒரு மந்திரவாதி. புரியவில்லையா? புஷ்கலாவின் தந்தையான பளிஞன் தான் அது.


ஆத்திரம் அடங்காத அவன், சாஸ்தாவைப் பார்த்துச் சாபமிட்டான்: “நீ ஒரு மனிதனாகப் பிறக்க வேண்டும். இரண்டு பெண்களை இப்போது மணந்த நீ, மனிதனாக, திருமணமே செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருப்பாயாக!’’


சாஸ்தாவும் அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டார். ஐயப்பனாக அவதரித்தார்.


ஆரைக்குளம் சாஸ்தாவை வழிபட்டுவிட்டு, அந்த மலை உச்சியில் ஒரு நிமிடம் கண்களை மூடி நின்று பாருங்கள். பூரணா, புஷ்கலா சமேத சாஸ்தா மட்டுமல்ல, அவர்களது மகன் சத்யகனும் உங்களுக்கு மானசீகமாக ஆசி புரிவான்!.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.