Thursday, October 10, 2013

பூவாலைக்குடியில் 23 மறவர் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.   
திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
   இதுதொடர்பாக, அந்த மையத்தின் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் கூறியது:
   புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சாலையிலுள்ள வையாபுரிக்கு அருகேயுள்ளது பூவாலைக்குடி என்னும் சிற்றூர். இங்குள்ள புஷ்பவனேசுவரர் கோயில், கருவறை மட்டுமே கொண்ட முத்தரையர் காலக் குடைவரைக் கோயிலாகும். சோழர் காலத்தில் இக்குடைவரையின் முன் முகமண்டபம் அமைக்கப்பட்டது.
   பிற்பாண்டியர் காலத்தில் பெருமண்டபமும், விஜயநகர அரசர்களின் ஆட்சிக் காலத்தில் முன்மண்டபமும் கட்டப்பட்டன. குடைவரைக் கோயிலின் தென்புறத்தில் இரண்டாம் பாண்டியர் கால அம்மன் கோயிலும், வடபுறத்தில் முருகன், பைரவர், சண்டேசுவரர் திருமுன்களும் (சன்னதிகளும்) அமைந்துள்ளன. இக்கோயில் வளாகத்திலிருந்து பதினைந்து கல்வெட்டுகள் ஏற்கெனவே படியெடுக்கப்பட்டுள்ளன.
   சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. நளினியின் தலைமையில் இக்குடைவரையில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆர்வலர்கள் 23 புதிய கல்வெட்டுகளைக் கண்டெடுத்தனர்.
   அவற்றுள் வீரராஜேந்திர சோழர் காலக் கல்வெட்டு, கூடலூர் நாட்டுப் பூவாலைக்குடியைச் சேர்ந்த தென்னவதரையன், இக்கோயிலில் இரவும், பகலும் எரியுமாறு நந்தாவிளக்கு ஏற்றுவதற்காக இருபத்தைந்து பசுக்களைக் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்ததாகக் கூறுகிறது. அப்பசுக்களைத் தம்பொறுப்பில் ஏற்றுக் கொண்ட சுந்தரசோழக் கோன் உரிய நெய் கொண்டு தொடர்ந்து விளக்கேற்ற ஒப்புக்கொண்டார்.
   முகமண்டபத் தூண்களில் காணப்படும் கல்வெட்டுகள் அவற்றைக் கொடையளித்தவர்களாகப் பனைந்தலை மறவன் முப்பேருடையானையும், பூவாலைக்குடி மறவன் பெரியநாசி சதிராண்டியையும் அடையாளப்படுத்துகிறது.
   பெருமண்டபத் தூண்களில் காணப்படும் ஐந்து கல்வெட்டுகளுள் மூன்று, சுந்தர சோழபுரத்தைச் சேர்ந்த கண்ணனூருடையார் திருமேனியார் கொற்றப்பிள்ளை பூவனூர்க் கிழவர் அத்தூண்களைத் தந்த தகவலைச் சொல்கிறது.
   மண்டபக் கூரையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள நாயகப் பத்தியில் போடப்பட்டிருக்கும் கற்களுள் ஏழினையும், மண்டபத்தில் காணப்படும் போதிகையையும் இப்பூவனூர்க் கிழவரே கொடையளித்திருப்பதாக மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது.
   திங்கள்தோறும் நடக்கும் கோயில் சிறப்புப் பூஜையின்போது கிழவரின் இந்த அரிய பணிகளைப் பாராட்டித் தீர்த்தமும், திருநீறும் கோயில் மரியதையுடன் அளிக்கப்பட்டன.
   மண்டபத்திலுள்ள மற்றொரு போதிகையைத் தந்தவராகச் சுந்தரசோழபுரத்துக் கண்ணனூருடையான் பொன்னாண்டான் சிவந்தெழுந்தார் அறிமுகமாகிறார். 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகக் கொள்ளத்தக்க இக்கல்வெட்டுகள் அனைத்தும் பூவாலைக்குடிக் கோயிலின் முகமண்டப, பெருமண்டபக் கட்டுமானங்களில் பங்கெடுத்துக் கொண்ட பேராளர்களை அறிமுகப்படுத்துவதுடன், கோயில் கட்டுமானம் சார்ந்த உறுப்புகளின் பெயர்களையும் தருகிறது.
   முன்மண்டபத்தில் காணப்படும் தூண் கல்வெட்டுகள் பூவாலைக்குடி அப்பபட்டர் ஆடும் பெருமாளும், முப்பிரபாலன் மனச்சாரும் இக்கோயிலில் எப்போதும் வழிபட்டிருப்பதாகக் கூறுகின்றன.

   எழுத்தமைதி அடிப்படையில் இக்கல்வெட்டுகளைப் பதினாராம் நூற்றாண்டுக்குரியனவாகக் கொள்ளலாம்.
   முகமண்டப வாயிலின் மேல்நிலையில் காணப்படும் பதினான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு அத்திருநிலையைச் செய்தளித்தவராகப் பந்தனை இளமகன் குப்பை சுந்தரன் செருந்திமலை நாடாள்வானைக் குறிக்கிறது. பெருமண்டப வாயிலின் மேல்நிலையில் காணப்படும் கல்வெட்டு, கோவனூர் மறவரில் சூரியதேவர் பூவாலைக்குடி ஆண்டார் முறபாடு கொடார் என்பார் அத்திருநிலையையும் முகவணையையும் செய்தளித்தாகக் கூறுகிறது.    வாயில் முகப்பை அலங்கரிக்கும் அமைப்பையே இக்கல்வெட்டில் இடம்பெறும் முகவணை என்ற சொல் குறிக்கிறது. மிகஅரிதாகக் கல்வெட்டுகளில் காணப்படும் இச்சொல் குடுமியான்மலையில் கண்டெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு ஒன்றிலும் இடம்பெற்றுள்ளது.   பூவாலைக்குடியில் கோயில் விரிவாக்கத்தில் சுற்றுப்புற மக்கள் ஆர்வத்தோடு தங்களை இணைத்துக் கொண்டமையை இப்புதிய கல்வெட்டுகள் வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார்

இரா. கலைக்கோவன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.